ஐ.பி.எல் தொடரில் முதன்முறையாக ஆர்.சி.பி அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதனால், கர்நாடக மாநில மக்கள் கடும் உற்சாகத்தில் உள்ளனர். விராட்கோலி மிகுந்த மனமகிழ்ச்சியில் உள்ளார்.
இந்த நிலையில், வெற்றி பெற்ற ஆர்சிபி அணிக்கு அந்த அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பதிவு வெளியிட்டுள்ளார். இதையடுத்து, பலரும் அவரை இந்தியாவுக்கு வரும்படியும் சேர்ந்து வெற்றியை கொண்டாடுவோம் என்றும் கூறியுள்ளனர்.
கடந்த 2008ம் ஆண்டு ஆர்.சி.பி அணி விஜய் மல்லையாவின் யுனைடெட் புருவரீஸ் நிறுவனம் வாங்கியது. கிட்டத்தட்ட 111 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஆர்.சி.பி அணி வாங்கப்பட்டது. 2008ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை விஜய் மல்லையாதான் ஆர்சிபி அணி உரிமையாளராக இருந்தார்.
இதற்கிடையே, வங்கிகளிடம் வாங்கிய 9 ஆயிரம் கோடி லோனை கட்ட தவறியதால் , விஜய் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பி விட்டார். அவரை, இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால், இன்று வரை அவரை இந்தியா கொண்டு வர முடியவில்லை.
சரி… அப்படியென்றால் இப்போது ஆர்.சி.பி அணியின் உரிமையாளர் யார் என்கிற கேள்வி எழுகிறது அல்லவா? விஜய் மல்லையா தனது யுனைடெட் புருவரீஸ் நிறுவனத்தை டியாஜியோ இன்டியா என்ற நிறுவனத்துக்கு விற்று விட்டார். இதுவும் மது பான தயாரிப்பு நிறுவனம்தான்.
பெங்களுருவை சேர்ந்த இந்த நிறுவனம்தான் இப்போது ஆர்.சி.பி அணியின் உரிமையாளர்.ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர் வரை இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கின்றனர். மது பான தயாரிப்பு மட்டுமல்ல பல்வேறு தொழில்களில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. மகேந்திர குமார் ஷர்மா என்பவர் இந்த நிறுவனத்தின் தலைவர் ஆவார். ஆனந்த் கிரிப்லு என்பவர் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். இவர்கள் இருவரும்தான் தற்போது ஆர்.சி.பி அணியை திறம்பட வழி நடத்தி வருகின்றனர்.
ஐ.பி.எல் அணிகளின் உரிமையாளர்கள் பலரும் மைதானத்தில் தென்படுவார்கள். ஆனால், ஆர்.சி.பி உரிமையாளர்களை மைதானத்தில் அரிதாகவே பார்க்க முடியும்.