பஹால்காம் தாக்குதல் நடத்துவது குறித்து மோடிக்கு 3 நாட்களுக்கு முன்னரே தெரியுமென்று காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தானுடன் போர் சூழலில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடி மீது வேறு விதமான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பஹால்காமில் தாக்குதல் நடந்த 22ம் தேதிக்கு முன்னதாக ஏப்ரல் 19ம் தேதி மோடி காஷ்மீர் செல்வதாக இருந்தது. கத்ராவில் இருந்து ஸ்ரீநகர் செல்லும் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைப்பது அவரின் பயண திட்டம். அப்போது, உளவுத்துறை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் கூறியுள்ளனர். இதையடுத்து, பிரதமர் மோடியின் பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர். உளவுத்துறை அதிகாரிகள் தகவல் அளித்ததும் பாதுகாப்பை பலப்படுத்தியிருக்க வேண்டாமா? என்றும் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 24ம் தேதி பஹால்காம் தாக்குதலையடுத்து, அனைத்துக்கட்சிகள் கூட்டம் நடந்தது. அப்போது, பஹால்காமில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததை மத்திய அரசு ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. வழக்கமாக அமர்நாத் யாத்திரை தொடங்கும் போதுதான், பஹால்காம் அருகிலுள்ள பைசரன் பள்ளத்தாக்கு திறக்கப்படும். ஆனால், முன்னரே திறந்தது குறித்து உள்ளுர் அதிகாரிகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கவில்லை என்று அனைத்துக் கட்சி கூட்டத்தின் போது, பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.