2025ம் ஆண்டு முடிவதற்குள் பாகிஸ்தான் என்ற ஒரு நாடே இருக்காது என்று பாரதிய ஜனதா கட்சி எம்.பி நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளார்.
ஜார்ஹண்டில் ரயில்வேதுறை நிகழ்ச்சி ஒன்றில் பாரதிய ஜனதா கட்சி நிஷிகாந்த் பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது,
‘பிரதமர் நரேந்திர மோடி பிகாரில் ஆற்றிய உரையின் போது, பயங்கரவாதத்தையும் அதன் ஆதரவாளர்களையும் ஒழிக்க சபதம் செய்திருந்தார். இது பாகிஸ்தானின் சிதைவுக்கு வழிவகுக்கும் . பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரின் பகுதியை மீட்டெடுப்போம். பாகிஸ்தான், பலுசிஸ்தான், பக்துனிஸ்தான் மற்றும் பஞ்சாப் என நான்கு தனித்தனி நாடுகளாகப் பிரிக்கப்படும். பிரதமர் நரேந்திர மோடி இதை உறுதி செய்வார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் பாகிஸ்தான் துண்டு துண்டாக உடையும். அப்படி செய்யவில்லையென்றால், பாரதிய ஜனதா கட்சியை நீங்கள் கேள்வி கேட்கலாம். இதை நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன். பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்துக்களை குறி வைத்து தாக்கியுள்ளனர். இதற்கு, கண்டிப்பாக மோடி அரசு பழி வாங்கும்.
பாகிஸ்தான் ராணுவ தளபதி தனது மொத்த குடும்பத்தையும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தார். பிரதமர் மோடி மீதான பயத்தில்தான் அவர் அப்படி செய்துள்ளார். பிரதமர் மோடியின் வலிமை , ஆற்றலை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன. அந்த தீவிரவாத நாடு துடைத்து எரியப்படும்.