கடந்த 21ம் தேதி மாலையில் டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் புறப்பட்ட இண்டிகோ விமானம் ஆலங்கட்டி புயலால் நடுவானில் சிக்கி குலுங்கியுள்ளது.
85 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த போது அந்தரத்தில் விமானம் குலுங்கியதால் பயணிகள் அலறியுள்ளனர். விமானத்தின் உள்ளே பயணிகள் கடும் அச்சத்தில் இருந்த நிலையில் அவசரமாக தரையிறங்க பைலட் அனுமதி கேட்ட நிலையில், ஸ்ரீநகரில்பாதுகாப்பாக விமானம் தரையிறங்கியுள்ளது. விமானத்தின் முன்பகுதி சேதமடைந்தாலும் பாதுகாப்பாக ஸ்ரீநகரை அடைந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இண்டிகோ விமானத்தின் பைலட் புயலைத் தவிர்க்க பாகிஸ்தான் வான்வெளியில் சற்ற நுழைய லாகூர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, அவர்கள் தற்போது இந்திய விமானங்களுக்கு தடைசெய்யப்பட்ட மண்டலம் இதுவென்று பதில் அளித்துள்ளனர். இதையடுத்து, மோசமான வானிலையைக் கடந்து ஸ்ரீநகருக்கு பயணத்தைத் தொடர முடிவு செய்ததாக, இந்தியாவின் விமானப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் இண்டிகோ விமானத்தின் பைலட் கூறியுள்ளார்.
அதே போல , சர்வதேச எல்லையையொட்டியுள்ள பகுதிக்கு விமானத்தை திருப்ப இந்திய விமானப்படை வடக்கு மண்டல கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்ட போது, அவர்களும் அனுமதிக்கவில்லை என்று விமானி கூறியுள்ளார். ஆனால், இது தொடர்பாக இந்திய விமானப்படை எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.