கோடையில் காத்திற்கும் ஆபத்து..! உஷார் மக்களே உஷார்..!!
கோடைகாலம் என்றாலே நம்மில் பலருக்கும் சந்தோஷம். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை நாட்கள். அந்த விடுமுறையை மகிழ்ச்சியோடு கொண்டாட சுற்றுலா செல்ல அனைவரும் ஆவலாக எதிர்நோக்கும் தருணம் இது.
இருந்தாலும் சுட்டெரிக்கும் சூரியனால் ஏற்படும் வெப்பத்தை தாங்கிக் கொள்ள முடியாத நிலை உள்ளது .
ஆகையால் எப்போதுதான் இந்த கோடைகாலம் முடியுமோ என்று ஒரு சிலரை நினைக்கவும் வைத்து விடுகிறது இந்த வெப்பம் .
கோடைகாலத்தில் நம் உடலில் வெப்பத்தின் காரணமாக பல தாக்கங்கள் ஏற்படும். குறிப்பாக அதிகமான வெப்பம் மற்றும் தூசியினால் கண்ணில் ஒவ்வாமை (அலர்ஜி) தொந்தரவுகள் ஏற்படலாம்.
இதனால் கண்கள் சிவந்து அரிப்பு ஏற்பட்டு கண்ணில் நீர் வடிதல், உறுத்தல் உண்டாகும். மற்றும் பலருக்கு கண்ணில் தொற்று நோய் (மெட்ராஜ் ஐ) ஏற்படலாம்.
கண்களில் இவ்வாறான பாதிப்புகள் ஏற்பட்டதும் ஒடனே மருந்துக் கடைகளுக்கு சென்று சொட்டு மருந்துகளையோ அல்லது களிம்புகளையோ வாங்கி கண்ணில் போடக் கூடாது.
கண் மருத்துவரை நாடி அதற்குரிய சிகிச்சையை பெற வேண்டும். கோடைகாலத்தில் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு நாம் வெளியில் செல்லும் பொழுது கருப்பு கண்ணாடி அல்லது சாதாரண கண்ணாடி அணிந்து செல்வது நல்லது.
கண்ணாடி அணிவதனால் நமக்கு பல நன்மைகள் உண்டாகும்.
சூரிய ஒளியிலிருக்கும் தீய புற ஊதாக் கதிர்களால் கண்ணில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கலாம்.
சூரிய ஒளியிலிருக்கும் அபாயகரமான கதிர்களால் கண்களில் புரை மற்றும் விழித்திரை பாதிப்புகள் ஏற்படலாம்., அதையும் தவிர்க்கலாம்.
சூரிய வெப்பம் அதிகமாக இருக்கும் காரணமாக கண்கள் வறண்டு நீர் பசையின்றி போக கூட வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக கண்ணில் உறுத்தல்,கண் எரிச்சல் ஏற்பட்டு சிவந்து போவதை ஓரளவு தடுக்கலாம்.
தற்போது கிடைக்கும் கண்ணாடிகள் அனைத்துமே பெருமளவிற்கு சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களை விலக்க செய்கின்றன.
இதனால் கண்கள் பாதுகாக்கப்படுகின்றன. கோடைகாலங்களில் தாகத்தை தணித்துக் கொள்ள நீர் மோர் பானங்களை நாம் அதிகமாக விரும்பி அருந்துவோம்.
இதிலும் கவனம் தேவை. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் கொண்டு தயாரிக்கப்படும் பானங்களை நாம் அருந்த வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் வயிற்றுப்போக்கு மற்றும் வேறு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இவைகளாலும் கண்ணில் பாதிப்பு ஏற்படலாம். கண்களில் தொற்றுநோயும் ஏற்படலாம். கண்களில் ஒவ்வாமை, தொற்று நோய், கண்கட்டி, உலர்ந்த தன்மை ஆகிய நோய்கள் கோடைகாலங்களில் அடிக்கடி ஏற்படும் முக்கியமான கண் பாதிப்புகள் ஆகும்.
கண்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் பொழுது கண் மருத்துவரை அணுகி அதற்கு தகுந்தார் போல் சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு விடுமுறை என்பதால் கண் பரிசோதனை செய்து கொள்வது பரிந்துரைக்க தக்கதாகும்.
குறிப்பாக குழந்தைகளுக்கு பார்வைக்குறைவு, மாறுகண் போன்ற பிரச்சினைகள் இருந்தால் கண் மருத்துவரிடம் பரிசோதனை செய்து சரி செய்து கொள்ளலாம்.
சர்க்கரை நோயாளிகள் கவனத்திற்கு :
இந்த கோடை விடுமுறையில் வெப்பத்தின் காரணமாக சர்க்கரை நோயாளிகளும் கண் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
இவ்வாறு செய்து கண்ணில் சர்க்கரை நோயினால் விழித்திரைப் பாதிப்பு (ரெட்டினோபதி) கண்டறியப்பட்டால் அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாகவே 40 வயதுக்கு மேல் ஆகிவிட்டால் சர்க்கரை நோய் , ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இதே போன்று கண்களில் சர்க்கரை நோயினால் விழித்திரை பாதிப்பு மற்றும் உயர் கண் நீர் அழுத்த நோய் (க்ளோக்கோமா) ஏற்படலாம். ஆகவே 40 வயது ஆகி விட்டாலே அனைவரும் கண் பரிசோதனை செய்து கொண்டு கண்ணில் ஏதும் பாதிப்பு இருப்பது தெரிய வந்தால் அதன் ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்து அதற்கு உரிய சிகிச்சை பெற்றுக் கொண்டால் இவ்வாறான பாதிப்பில் இருந்து நம்மை காத்து கொள்ளலாம் ..
– வீர பெருமாள் வீர விநாயகம்.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..