சபரிமலைக்கு 10 வயது சிறுமிகள் முதல் 50 வயது பெண்கள் வரை செல்ல தடைவுள்ளது. இதன் காரணமாக, பெண்கள் நினைத்த நேரத்தில் சரிமலை சென்று விட முடியாது. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபட மிகுந்த ஆசை இருந்தது. அப்போது, இந்திரா காந்தி பிரதமராக இருந்ததால், சன்னிதானத்துள் நேரடியாக சென்று இறங்கும் வகையில், ஹெலிபேட் அமைக்க பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால், ஹெலிபேட் அமைக்க கடும் எதிர்ப்பு கிளம்பியதால், இந்திராகாந்தியின் சபரிமலை விஜயம் தடை பட்டு போனது.
இந்த நிலையில், தற்போது இந்திய குடியரசுத் தலைவராகவுள்ள திரவுபதி முர்மு சபரிமலை செல்ல முடிவு செய்துள்ளார். இதற்காக, வரும் மே18,19களில் அவர் கேரளா வருகிறார். 18ம் தேதி காலை நிலக்கல்லுக்கு ஹெலிகாப்டரில் வரும் அவர் முதலில் குமாரக்கம் செல்கிறார். பின்னர், அங்கிருந்து 19ம் தேதி காரில் பம்பை செல்லவுள்ளார். அங்கிருந்து, இருமுடி கட்டி கால் நடையாகவே சன்னிதானம் அடைந்து ஐயப்பனை வழிபடுகிறார்.
சன்னிதானத்தில் சபரி விருந்தினர் மாளிகை, தேவசம் விருந்தினர் மாளிகை என்ற இரு மாளிகைகள் உள்ளன. இவ்ற்றில் ஏதாவது ஒன்றில் திரவுபதி முர்மு தங்கியிருப்பார். தற்போது, 66 வயதாகும் முர்மு சபரிமலைக்கு வருவது குறித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சபரிமலை நடை வைகாசி மாத பூஜைக்காக வரும் 14ம் தேதி திறக்கப்படுகிறது. இவற்றில் கடைசி இரு நாட்களான 18 மற்றும்19ம் தேதிகளில் சபரிமலை குடியரசுத் தலைவருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் சபரிமலையில் தங்கியிருந்தாலும், மற்ற பக்தர்கள் சாமியை வழிபட எந்த தடையும் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது. எனினும், இந்த இரு நாட்களில் ஆன்லைன் புக்கிங் நிறுத்தப்பட்டுள்ளது.
பம்பையில் இருந்து சபரிமலை செல்ல நீலிமலை, அப்பாச்சி மேடு, சுவாமி ஐயப்பன் சாலை ஆகிய 3 பாதைகள் உள்ளன. இந்த பாதைகளை மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். குடியரசுத் தலைவர் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் பாதை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அதே போல, டோலிகளும் தயார் நிலையில் இருக்கின்றன.
குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு மருத்துவ வசதிகள், எமர்ஜென்சிக்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏறபாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. சபரிமலையில் சாமி தரிசனம் செய்யும் முதல் குடியரசுத் தலைவர் முர்மு என்பதும் குறிப்பிடத்தக்கது.