வாழ்க்கையே போராட்டம் நிறைந்தது. எப்போது, எப்படியெல்லாம் தடை வரும் என்று தெரியாது. ஆனால், அத்தகையை தடைகளை மீறி வெற்று பெறுவதுதான் மனித வாழ்க்கையின் மகத்துவம். அப்படி, வாழ்க்கையில் ஏற்பட்ட தடையை தகர்த்து கேரள இளைஞர் ஒருவர் வெற்றி பெற முடிவு செய்துள்ளார். அவருக்கு என்ன நடந்தது? அந்த தடையை எப்படி தகர்த்து எறிந்தார் என்று பார்க்கலாம்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி பகுதியை சேர்ந்த இளைஞர் முத்து. இவர், பி.ஏ பொலிடிக்கல் சயின்ஸ் படித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு இவர் கேரள வனத்துறையில் வனக்காவலர் பணிக்கு விண்ணப்பித்திருந்தார். இந்த பணிக்கு 10ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது.
பழங்குடியினருக்கு நடத்தப்படும் கேரள பப்ளிக் கமிஷன் நடத்திய தேர்விலும் வெற்றி பெற்றார். இதையடுத்து, நேர்முக தேர்வுக்கு சென்றார். அப்போது, பரிசோதித்த மருத்துவ அலுவலர்கபள் முத்துவின் பல் துருத்திக் கொண்டு இருப்பதாக கூறி அவரின் வேலை வாய்ப்பை தட்டி பறித்தனர். தனது பல்லை காரணம் காட்டி வேலை கொடுக்க மறுத்ததால், முத்து நொந்து போனார். கை, காலில் பிரச்னை என்றால் பரவாயில்லை. துருத்திய பல்லை காரணம் காட்டி வேலை கொடுக்காமல் மறுப்பது சரியா? என்று போராட தொடங்கினார்.
இத்தகையை , விதியை தளர்த்த வேண்டுமென்று கேரள மாநில பப்ளிக் சர்வீஸ் கமிஷனிடத்தில் முத்து மனு அளித்தார். ஆனால், எந்தவிதமான சாதகமான பதிலும் வரவில்லை. இந்த விதியை ஏற்படுத்தியது அரசுதான். எனவே, அரசுதான் இந்த விதியை தளர்த்த வேண்டுமென்று பப்ளிக் சர்வீஸ் கமிஷன் கூறி விட்டது.
அப்போது, கேரள வனத்துறை அமைச்சராக இருந்த சசிதரனும், அரசு இந்த விஷயத்தில் தலையிட முடியாது. விதியை மாற்றவும் வழியில்லை. முத்துக்கு உடல்ரீதியாக தகுதி இல்லையென்றால், மற்றொருவருக்கு அந்த வேலை வழங்கப்பட்டு விடும் என்று கூறி விட்டார்.
இந்த நிலையில், கடந்த 30ம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த கேபினட் மீட்டிங்கில் துருத்திய பல் சீருடை பணியாளர்களுக்கான தேர்வுக்காக தகுதியில் இருந்து நீக்கப்பட்டது. போலீஸ், வனத்துறை, தீயணைப்புத்துறையின் இனிமேல் வேலையில் சேர துருத்திய பல் தடையாக இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விதி தளர்த்தப்பட்டதையடுத்து, 26 வயதான முத்து மீண்டும் அந்த பணியில் சேர விண்ணபிக்க முடிவு செய்துள்ளார்.
இந்த விதி குறித்து , கேரள பப்ளிக் கமிஷனின் முன்னாள் தலைவர் சுகீர் கூறுகையில், இப்போது துருத்திய பல்லை சீரமமைக்க எவ்வளவோ நவீன ட்ரீட்மென்ட்கள் வந்து விட்டன. கை, காலில் பாதிப்பு என்றால் வேறு விஷயம். இது போன்ற துருத்திய பல்லை காரணம் காட்டியெல்லாம் வேலை வாய்ப்பை மறுக்கக் கூடாது. காலத்துக்கு ஏற்பட விதிகளை மாற்றவோ, தளர்த்தவோ அரசு முன் வர வேண்டுமென்று கூறியுள்ளார்.