சுவையான செட்டிநாடு ஸ்பெஷல் தேங்காய்ப்பால் குணுக்கு எப்படினு பார்க்கலாமா..!
தேங்காய்ப்பால் குணுக்கை, பால் பனியாரம் என்றும் சொல்லுவார்கள். செட்டிநாடு பகுதிகளில் இது மிகவும் பிரபலமானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது.
தேங்காய்ப்பால் வயிற்றில் உள்ள புண்களை ஆற்றி, உடல் உஷ்ணத்தைக் குறைக்கக்கூடியது. இந்த வெயில் காலத்தில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்து அவர்களை கவருங்கள் மேலும் வெயிலில் விளையாடும் குழந்தைகளின் உடலுக்கு இது பயனளிக்கக்கூடியது.
தேவையான பொருட்கள்:
தேங்காய்- 1
உளுந்து- 100 கி
நாட்டு சர்க்கரை- 100 கி
அரிசி- 2 ஸ்பூன்
எண்ணெய்- பொறிப்பதற்கு
ஏலக்காய்- ஒரு சிட்டிகை
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
-
முதலில் உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக கலந்து 2 மணி நேரம் நீரில் ஊற வைத்து பின் அதை வடை மாவு அரைக்கும் பதத்திற்கு அதிகம் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
-
அரைத்த மாவில் ஒரு சிட்டிகை உப்பு கலந்து 2 மணி நேரத்திற்கு அப்படியே மூடி வைக்க வேண்டும்.
-
தேங்காயை துருவி தேங்காய்ப்பால் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
-
ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால் மற்றும் காய்ச்சியப்பால் சிறிது கலந்து அதில் ஏலக்காய்த்தூள் மற்றும் ருசிக்கு தகுந்தவாறு நாட்டு சர்க்கரை கலந்து கொள்ள வேண்டும்.
-
ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
-
பின் ஒரு சின்ன கிண்ணத்தில் பனியாரத்தை போட்டு அதில் தேங்காய் பால் சேர்த்து கலந்து சாப்பிடலாம்.