சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சாலை ஒன்றில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு , மழைநீர் தேங்கியிருந்த பள்ளத்தில் மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்துள்ளது. இதை அறியாத , அந்த பகுதியை சேர்ந்த ஜேடன் ராயன் என்ற சிறுவன் பள்ளத்தில் கால் வைத்துள்ளான்.
இதையடுத்து, மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் துடி துடித்து கொண்டிருந்தான். இந்த சமயத்தில் அந்த பாதையில் இரு சக்கர வாகனத்தில் வந்த கண்ணன் என்ற இளைஞர் சிறுவன் துடிப்பதை கண்டு பதறி போனார்.
உடனடியாக, நிலைமையை உணர்ந்த கண்ணன் ஓடி சென்று சிறுவனை பள்ளத்தில் இருந்து மீட்டார். தன் உயிரையும் பொருட்படுத்தாது சிறுவனை தண்ணீரில் இருந்து லாவகமாக வெளியே எடுத்தார்.பின்னர், அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிறுவனை சேர்த்துள்ளார்.
பின்னர், சிறுவனின் பெற்றோருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இரு நாட்கள் சிகிச்சையில் இருந்த சிறுவன் ஜேடன் ராயன் தற்போது நல்லமுறையில் குணமடைந்துள்ளான். தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சிறுவனை காப்பாற்றிய கண்ணனுக்கு சிறுவனின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.