நடிகர் விஜய்யின் அரசியல் நுழைவு என்பது ஒரு திடீர் முடிவு அல்ல. பல ஆண்டுகளாக திட்டமிடப்பட்டு, அரசியலுக்குள் நுழைந்ததாகவே தெரிகிறது. தனது ரசிகர்களை தனது அரசியல் ஆதாயத்துங்ககாக மாற்றிக் கொண்டதாகவே கருத வேண்டியதுள்ளது . ஆனால், அவருக்கு வெற்றி உடனடியாக கிடைத்து விடுமா? அரசியலில் தோல்வி வந்தால் தாங்கிக் கொள்ளும் சக்தி உள்ளதா? என்றால் போகப் போகத்தான் தெரியும்.
ஒரு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதனால் மட்டுமே விஜய் தனக்கான நிலையான இடத்தை பிடித்துவிட முடியுமா? இதன் உற்சாகத்தை தக்கவைத்துக்கொள்ள தனது அரசியலை தெருவுக்குத் தெரு எடுத்துச்செல்ல கூடிய ஒரு கட்டமைப்பை எழுப்ப வேண்டும். இன்றைய சூழலில் விஜய் மற்றும் ஆனந்தை தவிர்த்து சொல்லத்தக்க பெயர்கள் தவெக-வில் இல்லை என்பதே கசப்பான உண்மை. கட்சி துவங்கியது முதல் பதவிக்கு பணம் பெறுவதாகவும் பரவலாக குற்றச்சாட்டு எழுந்து கொண்டுதான் இருக்கிறது.
இவர்கள் பெற்றிருக்கும் வரவேற்பை வாக்குகளாக மாற்றுவதற்கு பல யுத்திகள் தேவை. வாக்குச்சாவடி முகவர்களை கண்டறிந்து, அவர்களை தயார்படுத்த வேண்டும். வேட்பாளர்களை இனம் கண்டு, அவர்களின் செயல்பாடுகளை கண்காணித்து, தொகுதிவாரியாக செயல்திட்டங்களை கொண்டு வர வேண்டும். விஜய்யின் கட்சியில் விஜய், ஆனந்த், விசிகவில் இருந்து சென்ற ஆதவ் அர்ஜுனதா தவிர வேறு யாரை மக்களுக்கு தெரியும்- இதில், ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவுக்கு ஒட்டு விழுமா? என்றால் சந்தேகமே. ஏனென்றால், அதிமுக திமுக போன்ற கட்சிகள் உள்ளுரில் நன்கு அறிமுகமான பிரபலங்களைத்தான் தேர்தல் களத்தில் முன்னிறுத்துவார்கள். அப்படியிருக்கையில், நடிகர் விஜய் யாரை நிறுத்துவார்?
இன்றையச் சூழலில் சமூக வலைதளங்களில் களமாடுவது இன்றியமையாததுதான் என்றாலும், திமுக மற்றும் அதிமுகவின் கள அரசியல் வலிமையை எதிர்கொள்ளதக்க ஒரு தேர்ந்த படையை கட்டியெழுப்ப விஜய்யால் முடியுமா? அவரின் ரசிகர்கள் இப்போதும் விசிலடித்தான் குஞ்சுகளாகவே உள்ளனர். இவர்களை வைத்து கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டால் கூட மக்களுக்கு விஜய் மீது வெறுப்புதான் வளரும் என்று கூட அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
த.வெ.க. தலைவர் விஜய்யை பொறுத்தவரை முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை போல் ஒருபோதும் வாக்கு வங்கியை பெற முடியாது. எம்ஜிஆர் அரசியலில் நல்ல அனுபவம் பெற்றிருந்தார். கருணாநிதி திமுக தலைவர் என்ற நிலையில் அவரது அனுபவமும் அனைவரும் அறிந்ததே. இவர்கள் சினிமா பாணியில் பேசவிலலை. மேலும், அதுபோல் நடந்து கொள்ளவில்லை. மாறாக அனைத்து தரப்பினரையும் அரவனைணைத்து செல்லும் நடைமுறைகள் மற்றும் திட்டங்கள் அவர்களிடத்த்ல் இருந்தன. அந்த காலத்தில் சினிமாவுடன் மக்கள் ஒன்றியிருந்தனர். இப்போது, காலம் வேறு பட்டது.
விஜய் அதிமுகவுடன் சேர்ந்தால், கொள்கை முரண்பாடு முதலிலேயே காட்டி கொடுத்து விடும். ஊழலை ஒழிப்பேன் என்று கூறி கொண்டு ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற தலைவியின் கட்சியுடன் கூட்டணி அமைத்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? கொள்கை முரண்பாடுகள் கடுமையான கெட்டப்பெயரை வாங்கி கொடுக்கும். திமுக கூட்டணியின் வலுவான, நிலையான வாக்கு வங்கியை ஒரு போதும் அசைக்க முடியாது. எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போன்று செல்வாக்கும் பெற்றிடமுடியாது என்றனர். ஆனால், இப்போது எடப்பாடியும் நல்ல தலைவராக உருவாகி அதிமுகவை கட்டுக்குள் வைத்துள்ளார். 2026ம் ஆண்டு தேர்தலுக்க முன் அதிமுக வலுவான கூட்டணியையும் அமைக்க போவதாகவே தெரிகிறது.
விஜய்யின் கட்சி இன்னமும் ஒரு தேர்தலை கூட சந்திக்கவில்லை. அதற்குள், சினிமாவில் எப்படி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று புலம்புகிறார்களோ அதே போலவே, விஜய் கட்சியிலுள்ள பெண் நிர்வாகிகளும் புலம்ப தொடங்கியுள்ளனர். இதற்கு உதாரணம் கோவை வைஷ்ணவி. தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து வைஷ்ணவி விலகியுள்ள அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில “மூன்று மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். என்றும் நீயெல்லாம் ஒரு பெண்ணா? உனக்கெல்லாம் எதுக்கு அரசியல் தேவையா? ஒழுங்கா வீட்டுக்குள்ளேயே இரு என்று மிரட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தனக்கு கூடும் கூட்டத்தை பார்த்து புழகாங்கிதம் அடையும் விஜய், வைஷ்ணவிக்கு என்ன பிரச்னை ? என்று கூட யோசசித்து பார்த்ததாக தெரியவில்லை. யார் இவரை மிரட்டியது? அப்படி மிரட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என்றும் விஜய்யோ, ஆனந்தோ விளக்கம் கொடுக்வில்லை. யார் போனால் என்ன? என்கிற ரீதியில்தான் இருவரும் கட்சியை நடத்துவதாக தெரிகிறது. ஏனென்றால் கூடுகிற கூட்டம் விஜய்யின் கண்ணை மறைத்து விடுகிறது. இப்படித்தான் நடிகர் வடிவேலுவுக்கும் கூட்டம் கூடியது. அப்புறம் பல ஆண்டு காலம் சினிமாவில் நடிக்க முடியாத சூழலுக்கு வடிவேலு தள்ளப்பட்டார் . அதற்கு பிறகு, இப்போது வரை வடிவேலுவால் பழைய மார்க்கெட்டை மீட்டெடுக்க முடியவில்லை என்பதையும் விஜய் மறைந்து விட வேண்டாம்.
ஏனென்றால், அரசியல் மிகவும் பொல்லாதது!