“போர் யானைகளுடன் வாகை மலர்” அறிமுகம் செய்யப்பட்ட கட்சிக் கொடி..!! உறுதிமொழி ஏற்ற தவெக..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று காலை அக்கட்சியின் தலைவர் விஜய் கொடியை ஏற்றி வைத்து அறிமுகம் செய்தார்.. இந்நிகழ்ச்சியில் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகர் மற்றும் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் திரளாக பங்கேற்றனர்.
இரண்டு சிவப்பு நிறங்களுக்கு, நடுவே மஞ்சள் நிற கொடியில் அதன் நடுவே இரண்டு போர் யானைகளுக்கு , நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டது.., அதற்காக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான என்.ஆனந்த் கட்சியை பதிவு செய்தார். அதையடுத்து கட்சி சம்மந்தமான அறிக்கைகள் வெளியானது.. வருகின்ற 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் மட்டும் தான் இலக்கு என தளபதி விஜய் அறிவித்திருந்தார்..
அதைத் தொடர்ந்து, கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்ப்பதற்கான முழுவீச்சில் அக்கட்சி செயல்பட்டது.., அதற்காக கடந்த 19-ம் தேதி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மஞ்சள் நிறத்துடன் நடுவில் விஜய் படம் இருப்பது போன்ற கட்சிக் கொடியை ஏற்றி விஜய் ஒத்திகை பார்த்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
அதனை தொடர்ந்து கட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர் “நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.
நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம். மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன்” என உறுதிமொழி அளித்தனர்..
“சாதி, மதம், பாலினம், பிறந்த இடம், ஏற்றத்தாழ்வு ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளை உடைத்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பளித்து. மக்களுக்கு சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன் எனவும் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற சமத்துவக் கொள்கையை நாங்கள் கடைப்பிடித்து மக்களுக்காக பாடுபடுவேன் என உறுதி ஏற்றனர்..” தற்போது இந்த செயல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது..