தூத்துக்குடி துப்பாக்கிசூடு விவகாரம்., 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை..!! உயர்நீதி மன்றத்தின் முடிவு என்ன..?
தூத்துக்குடி துப்பாக்கிசூடு விவகாரத்தில் அருணா ஜெகதீசன் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கமளித்துள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
கடந்த 2018ல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், பின் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டது. இதன் பின் இந்த ஆணையம், தனது விசாரணை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. இதில் சிலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பரிந்துரையும் செய்யப்பட்டது.
இந்தநிலையில், சமூக ஆர்வலர் ஹென்றி திபென் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப பரிந்துரைத்த நிலையில், அரசு எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்..? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணை நவம்பர் 17க்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் ரகுபதி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அருணா ஜெகதீசன் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.