அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவதாகச் சொல்லப்பட்டது. இதனால், செங்கோட்டையன் செயல்பாடுகளை குறித்து வைகைச்செல்வன் உள்ளிட்டோர் விமர்சித்து வந்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.
சில மாதங்களாகவே இருவருக்கும் இடையேயான பனிப்போர் நடந்து கொண்டுதான் இருந்தது. எடப்பாடி பழனிசாமி கூட்டும் எந்த ஒரு கூட்டத்திலும் பங்கேற்காமல் செங்கோட்டையன் தவிர்த்தார். பொது நிகழ்ச்சிகள் சட்டசபையில் பேசும்போது கூட எடப்பாடி பழனிசாமி பெயரைக் குறிப்பிடுவதை செங்கோட்டையன் கவனமாக தவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறையில்தான் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும். அந்த ஆலோசனை கூட்டத்திலும் செங்கோட்டையன் கலந்து கொள்வதில்லை. பங்கேற்காமலேயே இருந்தார். இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது வீட்டில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு அளித்த பிரமாண்ட அசைவ விருந்து நிகழ்ச்சியிலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
இதனால் இருவருக்குமிடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருப்பதாகவே சொல்லப்பட்டது. இதற்கிடையே இன்று சட்டசபையில் யாரும் எதிர்பார்க்காத விஷயம் நடந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபையில் இப்போது மானியக் கோரிக்கை தொடர்பான விவாதம் நடந்து வருகிறது. பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வி தொடர்பான மானியக் கோரிக்கை குறித்த விவாதத்தில் பேச தொடங்கிய செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து தள்ளிவிட்டார். எடப்பாடியாரை வணங்கி உரையை தொடங்கியள செங்கோட்டையன் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் நல்லாட்சி வழங்கியவர் என்றும் மனம் குளிர பாராட்டினார்.
இவ்வளவு காலம் எடப்பாடி பெயரையே குறிப்பிடுவதைத் தவிர்த்த செங்கோட்டையன் இன்று திடீரென எடப்பாடியை வணங்கி உரையை ஆரம்பிப்பதாகப் பேசியது பலரது புருவத்தையும் உயர்த்தியது. பொதுவாகன மானியக் கோரிக்கை விவாதத்தில் ஒருவர் பேச வாய்ப்பு வேண்டுமென்றால், அதற்குக் கட்சியின் கொறடா அனுமதி தர வேண்டும். தற்போது அதிமுக கொறாடாவாகவுள்ள எஸ்.பி. வேலுமணி அதற்கு அனுமதி அளிக்க வேண்டும். கட்சித் தலைமை யாரை விரும்புகிறதோ.. அவருக்கே பேச வாய்ப்பு தரப்படும். செங்கோட்டையன் பேச எடப்பாடி பழனிசாமி கூறியதால்தான் கொறடா வேலுமணி அனுமதி அளித்திருப்பார். எனவே, எடப்பாடி, செங்கோட்டையன் மோதல் இத்துடன் முடிவுக்கு வ ந்து விட்டதாக நம்புகிறார்கள் அதிமுகவினர்.