அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பல ஆண்டுகளாக நடத்தி வந்த சரத்குமார், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தனது கட்சியை தமிழக பாஜகவோடு இணைத்தார். அப்போது, மாநில அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பதவி, உங்கள் கட்சியை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் என்று பா.ஜ.க சார்பில் உறுதி கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது, பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பதவி ஏற்றுள்ளார்.
ஜாதி ரீதியாக பரவலாக பல தரப்பினருக்கு பதவி வழங்கவும் நயினார் நாகேந்திரன் முடிவு செய்துள்ளாராம். சென்னையில் ரவுடிகள் பலர் பா.ஜ.ன கட்சியில் சேர்ந்ததாக புகார்கள் உள்ளன. அவர்களை கணக்கெடுத்து நயினார் நீக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் உள்ளது. வரும் 2026 லோக்சபா தேர்தலை மனதில் வைத்து பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை வேகப்படுத்த நயினார் நாகேந்திரன் முடிவு செய்துள்ளார்.
இதற்கிடையே, பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டதையடுத்து நடிகர் சரத்குமார் நேரில் சென்று சந்தித்து வாழ்த்தினார். அப்போது, தனக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் கொடுத்து, அவருக்கு நினைவுப்படுத்திய சரத்குமார், மாநில அளவில் எனக்கு என்ன பதவி தரப்போகிறீர்கள் ? தென் மாவட்டங்களில் 10-ம், மற்ற மாவட்டங்களில் 5-ம் எனது ஆதரவாளர்களுக்கு மாவட்ட தலைவர் பதவி தருவதாகச் சொல்லப்பட்டது. ஆனால், தரவில்லை என்று குமுறியுள்ளார்.
சரத்குமார் குமுறலை கண்டு கொள்ளாத நயினார், தேசிய தலைமைதான் உங்களை பற்றி முடிவெடுக்கும் என்று கூறியிருக்கிறார். நயினாரின் பதில் சரத்குமாரை யோசிக்க வைத்துள்ளது. இதையடுத்து, மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தூசி தட்டும் முடிவில் சரத்குமார் வந்திருப்பதாக தெரிகிறது. தனது ஆதரவாளர்களிடத்தில் அவர் மிகவும் சோர்வாக பேசியிருக்கிறார். இதையடுத்து, சரத்குமாரின் ஆதரவாளர்கள் மீண்டும் கட்சியை தொடங்குங்கள், 10 தொகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தி வெற்றி பெறுவோம் என்று அவருக்கு ஊக்கம் கொடுத்துள்ளனர்.