ஒமைக்ரானின் புதிய உருமாறிய கொரோனாவான XBB.1.16 வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவில் கோவிட்-19 பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் புதுச்சேரியிலும் கொரோன பாதிப்புகள் அதிகரித்து வருகின்றது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரியில் 36 பேரும், காரைக்காலில் 34 பேரும், ஏனாமில் ஒருவர் என மொத்தம் 71 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலமாக புதுச்சேரியில் ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 71 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு புதுச்சேரியில் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செயல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அதன்படி,
1. மக்கள் அனைத்து பொது இடங்களிலும் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
2. பொது இடங்கள், கடற்கரை சாலை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் மக்கள்கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்.
3. மருத்துவமனைகள், ஹோட்டல்கள், பார்கள், உணவகங்கள், மதுபான கடைகள், விருந்தோம்பல் மற்றும் கேளிக்கை விடுதி, அரசு அலுவலங்கள், வியாபாரம் மற்றும் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்கூடங்கள் ஆகிய இடங்களில் பணி செய்பவர்கள் முககவசம் அணிவதை உறுதி செய்யப்பட வேண்டும்.
4. அனைத்து அரசு/தனியார் நிறுவனங்களிலும் ஊழியர்களுக்கு 100% தடுப்பூசி செலுத்தப்பட்டதை உறுதி செய்யப்பட வேண்டும். அரசாங்கத்தால் அவ்வப்போது வெளியிடப்படும் அனைத்து அறிவுத்தல்களையும் / வழிகாட்டுதல்களையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். கொரோனா விதிமுறைகளை அதாவது, முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பித்தல், அடிக்கடி கைகளை கழுவுதல் மற்றும் கிருமி நாசினி பயன்படுத்துதல் போன்றவைகளை உறுதி செய்ய வேண்டும்.
5. கல்வி நிறுவனங்கள் உரிய செயல்பாட்டு நடைமுறைகளை (SOP) கவனமாகப் பின்பற்றி 100% தடுப்பூசி செலுத்தப்பட்டதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். 10ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தொடங்கியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேர்வு கூடங்களை முறையாக சுத்தப்படுத்தப்படுவதையும், மாணவர்களின் பயன்பாட்டிற்காக ஒவ்வொரு தேர்வு கூடத்திலும் கிருமி நாசினிகள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். தேர்வின் போது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது மற்றும் முகக்கவச பயன்பாடு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Discussion about this post