திமுக – மதிமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாநகரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், இன்று(மார்ச்.23) மதிமுகவின் 28வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் மதிமுகவின் அரசியல் நடவடிக்கைகள், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதேபோல், இந்த பொதுக்குழு கூட்டத்தில், மதிமுக தலைமைக் கழக செயலாளராக துரை வைகோ ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
திமுக முன்னெடுத்துள்ள பல்வேறு திட்டங்களை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என வலியுறுத்தியவர்கள்தான் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் சிவகங்கை மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
திமுகவுடன் தேர்தலை சந்தித்து, பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். கட்சியின் கூட்டங்களில் பங்கேற்காமல், கட்சிக்கு துரோகம் செய்தவர்கள். கட்சிக்கு துரோகம் செய்தவர்களை நீக்கம் செய்யாமல், விட்டு வைத்திருந்தேன். திமுக கூட்டணியில் முழு புரிதலோடு செயல்பட்டு வருகிறோம்.
நான் யாரையும் இழக்க விரும்பவில்லை; இதுவரை யாரையும் துன்பப்படுத்தியது கிடையாது. திமுகவுடன் நல்ல புரிதலில் இணக்கமாக உள்ள நிலையில், சிலர் குழப்பம் விளைவிக்கின்றனர். கட்சி நிர்வாகிகளிடம் பேசியே இதுவரை முக்கிய முடிவுகளை எடுத்துள்ளேன் என கூறியுள்ளார்.