பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களை வங்கதேசம் ஆக்கிரமிக்க வேண்டும் என வங்கதேசத்தின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸின் உதவியாளரான ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் ஃபஸ்லுர் ரஹ்மான் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, ‘பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் மேற்கொண்டால் வட கிழக்கு இந்தியாவில் உள்ள 7 மாநிலங்களை வங்கதேசம் தாக்க வேண்டும். சீனாவுடன் கூட்டு சேர்ந்து ராணுவ நடவடிக்கை சார்ந்த பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என நான் நினைக்கிறேன்” என அதில் ஃபஸ்லுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், ஃபஸ்லுர் ரஹ்மானின் கருத்தை எந்த வகையிலும் வங்கதேசத்தின் இடைக்கால அரசு ஆதரிக்கவில்லை. அவரது கருத்துக்கள் வங்கதேச அரசாங்கத்தின் நிலைப்பாட்டையோ அல்லது கொள்கைகளையோ பிரதிபலிக்கவில்லை என்று வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச் மாதத்தில் சீனா சென்ற வங்கதேச நாட்டின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ், சீன நாட்டின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியாவின் வட கிழக்கில் உள்ள 7 மாநிலங்கள் நிலத்தால் கட்டுண்டு கிடப்பதாகவும், அந்த மாநிலங்களுக்கு கடல் மார்க்க பாதுகாப்புக்கு ஆதாரம் வங்கதேசம்தான் . வங்கதேசத்தை மீறி இந்திய கடற்படை அங்கு வர முடியாது. இத்தகைய புவியியல் நிலையைப் பயன்படுத்தி வங்கதேசத்தில் சீனா பொருளாதார ரீதியாக காலூன்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. முகம்மது யூனுஸின் இந்த பேச்சுக்கு இந்திய தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர் .
கடந்த 1971ம் ஆண்டில் வங்கதேசம் என்ற ஒரு நாடு உருவானதே இந்திய ராணுவத்தால்தான் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.