தமிழ்நாட்டிற்கு வர இருக்கும் அசத்தல் திட்டங்கள்..!சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு..!
இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியில் கீழ் இரண்டு புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அந்த கூட்டதொடரில் அவர் பேசியதாவது, ” தமிழ்நாட்டின் உட்கட்டமைப்புக்கும், தொழில் வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமையப்போகும் மாபெரும் அறிவிப்பு ஒன்றையும், தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையப் போகும் சில முக்கிய அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
திமுக ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளும் வளர்ச்சி அடைந்துள்ளது. அதில் மிக முக்கியமான சில தொழில் நிறுவனங்கள் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளது. அதனால் வளர்ச்சி மிகு நாடாக தமிழ்நாடு இருப்பதால். பல்வேறு நிறுவனங்கள் உலகம் முழுவதும் இருந்து தொழில் தொடங்குவதற்கு முன் வந்துள்ளது. இந்தத் தொழில் நிறுவனங்கள் மூலமாகத் தமிழ்நாட்டின் தொழில் துறை வளர்ச்சி அடைந்துள்ளது.
கடந்த 2022 ம் ஆண்டிற்கான ஏற்றுமதியில் தயார்நிலை குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு “நம்பர்-1” மாநிலமாக முன்னேற்றம் கண்டுள்ளது. மோட்டார் வாகனங்கள், உதிரி பாகங்கள், தோல் பொருட்கள், மின்னணுப் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக இருக்கிறது.
புதுதொழில் வளர்ச்சிக்கான மாநிலங்களின் தரவரிசையில், கடந்த 2020ம் ஆண்டில் கடைசி நிலையில் இருந்த தமிழ்நாடு, தற்போது சிறந்த செயற்பாட்டாளர் என்ற பெருமையை பெற்று முதலிடத்தில் உள்ளது.
”இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரம் வாய்ந்த மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டினை, 2030ம் ஆண்டிற்குள் அமெரிக்க அளவிற்கு உயர்த்திட வேண்டும்” அதற்கான இலக்கினை விரைவில் அடைய வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது..
மேலும், மின்னணு மற்றும் மின் வாகனங்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களில் ஓசூர் கடந்த சில ஆண்டுகளில் முதலீடுகளை விட அதிகளவில் லாபம் ஈர்த்துள்ளது. இப்படிப்பட்ட சிறப்புகளைக் கொண்டு வேகமாக வளர்ந்து வரும் ஓசூர் நகரத்தினை தமிழ்நாட்டின் முக்கியமான பொருளாதார வளர்ச்சி மையமாக உருவாக்குவதற்காக, அங்கு நவீன உட்கட்டமைப்புகளை அமைக்கும் நோக்கில், பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை தமிழ்நாடு அரசு தற்போது செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், ஓசூர் நகரத்திற்கான ஒரு புதிய திட்டத்தை (Master Plan) தயாரித்து, அது முடிவடையும் தருவாயில் உள்ளது. ஓசூர் மட்டுமல்லாது, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி பகுதியின் ஒட்டுமொத்த சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஓசூரில் ஒரு விமான நிலையம் அமைப்பது அவசியம் என இந்த அரசு கருதுகிறது.
ஒசூரில் இரண்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில், ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடிய வகையில், ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்பதனை இந்த மாமன்றத்தில் நான் அ றிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
அடுத்து, ”இரண்டாவது அறிவிப்பை வழங்க விரும்புகிறேன். திராவிட இயக்கம் என்பது மாபெரும் அறிவியக்கம். அதனால்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் தலைமை நிலையத்துக்கு பேரறிஞர் அண்ணா “அறிவகம்” என்று பெயர்ச் சூட்டினார்.
தற்போதைய தலைமை நிலையத்துக்கு “அறிவாலயம்” என்று பெயர்ச் சூட்டினார் முத்தமிழறிஞர் கலைஞர். தி.மு.கழகம் எங்கெல்லாம் கிளை பரப்பியதோ, அங்கெல்லாம் படிப்பகங்கள் உருவாக்கப்பட்டன. அரசியல் இயக்கமாக மட்டுமல்லாமல், தமிழ் இலக்கிய இயக்கமாகவும் வளர்ந்தது.
வாசிப்பதற்கும் சுவாசிப்பதற்கும் வேறுபாடு காணமுடியாத வாழ்க்கை வாழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா. அந்த பேரறிஞரின் நூற்றாண்டைக் கொண்டாடி மகிழ்ந்த தலைவர் கலைஞர், கோட்டூர்புரத்தில் எட்டு மாடிகள் கொண்ட, ஒரே நேரத்தில் 1200 பேர் உட்கார்ந்து படிக்கிற வகையில், மூன்று லட்சத்து முப்பத்து மூன்றாயிரம் சதுர அடிகள் கொண்ட நூலகத்தை உருவாக்கி, அதற்கு “அண்ணா நூற்றாண்டு நூலகம்” என்ற பெயரையும் சூட்டி மகிழ்ந்தார்”.
அந்தவகையில், ”தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வசிப்பவர்களும் நூலகங்கள் மூலம் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில், சங்கம் வைத்து மாத்தமிழ் வளர்த்த மதுரையில் 15-7-2023 அன்று கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டு, என்னால் திறந்து வைக்கப்பட்டது”.
இதன் தொடர்ச்சியாக, ”கோயம்புத்தூர் வாழ் பொது மக்களுக்கும் இளைய தலைமுறைக்கும் பயன்படும் விதமாக ஒரு மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம், முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் என்று இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்தோம்.
அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. அந்த வரிசையில் காவிரிக் கரையில் அமைந்த மாநகரமான திருச்சிராப்பள்ளி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்பதை இந்த அவைக்கு மட்டற்ற மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
பல்வேறு வசதிகளை உள்ளடக்கி, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியப் பகுதியில் ஓர் அறிவுக் களஞ்சியமாக அது அமைந்திடும். தினந்தோறும் திட்டங்கள் தீட்டும் நாளாக, விடியும் நாளாக, விடியல் தரும் நாளாக உருவாக்கி வருகிறோம்” என்றார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..