“தமிழ்நாட்டின் கிங் மேக்கர்” கர்மவீரர் காமராஜர் 122..!
கர்மவீரர் காமராஜர் இவர் ஜூலை 15ம் தேதி 1903ம் ஆண்டு பிறந்தார். ஓர் இந்திய விடுதலைப் போராட்ட ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆக திகழ்ந்தவர். இவர் ஏப்ரல்13ம் தேதி 1954ம் ஆண்டு முதல் அக்டோபர் 2 1963ம் ஆண்டு வரை தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார்.
இவர் 1964ம் ஆண்டு முதல் 1967ம் ஆண்டு வரை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பணியாற்றினார். அப்பொழுது லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி ஆகியோர் இந்தியப் பிரதமர் பதவிக்கு உயர்த்தப்படுவதற்குக் காரணமாக இருந்தார். அதன் காரணமாக 1960ம் ஆண்டு களில் இந்திய அரசியலில் இவர் “கிங்மேக்கர்” (அரசர்களை உருவாக்குபவர்) என்று பெயர் பெற்றார்.
பின்னர், இவர் நிறுவன காங்கிரசு கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக இருந்தார். பிறப்பிற்கு பின் காமாட்சியாக அறியப்பட்ட காமராசர், பள்ளிப் படிப்பை ஆரம்ப காலத்திலேயே நிறுத்தி விட்டு தொடர்ந்து. 1920 களில் இந்திய சுதந்திர இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டார்.
அந்த செயல்பாடுகள் காரணமாக பிரித்தானிய அரசால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். 1937ல், காமராசர் சென்னை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.
விசாரணையின்றி இந்தியர்களின் சிறைவாசத்தை நீட்டித்த 1919ம் ஆண்டின் ரௌலட் சட்டம் மற்றும் அதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான அமைதியான போராட்டக்காரர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். ஜலியான்வாலா பாக் படுகொலை இந்த நிகழ்வுகளை பார்த்து காமராசர் தனது 16 வது வயதில் இந்திய தேசிய காங்கிரசு இயக்கத்தில் சேர முடிவு செய்தார்.
21 செப்டம்பர் 1921 அன்று, இவர் மதுரையில் முதன்முறையாக மகாத்மா காந்தியைச் சந்தித்தார். காந்தியின் மது ஒழிப்பு, காதி பயன்பாடு மற்றும் தீண்டாமை ஒழிப்பு போன்ற கருத்துக்களால் கவரப்பட்டார். 1922 ஆம் ஆண்டில், ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக வேல்ஸ் இளவரசர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க காமராசர் சென்னைக்கு வந்தார்.
பின்னர் விருதுநகரின் “நகரக் காங்கிரசு குழு உறுப்பினர்” ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் ஒரு பகுதியாக, இவர் இந்திய விடுதலை இயக்கத்தில் சேர மக்களைத் தூண்டுவதற்காக, காந்தியின் பேச்சுக்கள் அடங்கிய ஒரு துண்டு பிரசுரங்களை விநியோகித்தார்.
அடுத்த சில ஆண்டுகளில், காமராஜர் நாக்பூரில் நடந்த கொடி சத்தியாகிரகம் மற்றும் சென்னையில் நடந்தவாள் சத்தியாகிரகம் ஆகியவற்றில் கலந்து கொண்டார். இவர் மதுரை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் காங்கிரசின் கூட்டங்களை ஏற்பாடு செய்தார்.
காங்கிரசு தலைமை மற்றும் சிறைவாசம் :
1940ம் ஆண்டு காமராசர் சென்னை மாகாணத்தின் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், சத்தியமூர்த்தியின் பொதுச்செயலாளராக பணியாற்றினார். சென்னை மாகாண ஆளுநர் ஆத்தர் ஹோப் இரண்டாம் உலகப்போரின் போது நேச நாடுகளுக்கு நிதியளிக்க நன்கொடைகளை சேகரித்த போது, அதற்கு எதிராக பிரச்சாரத்தை நடத்தினார்.
1940ம் ஆண்டு டிசம்பர் மாதம் போர் நிதிக்கு நன்கொடை அளிப்பதை எதிர்த்து பேசியதற்காக இந்திய பாதுகாப்பு விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருக்கும் போதே 1941ல் விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒன்பது மாதங்களுக்குப் பின் விடுதலை ஆனதும் நேராகச் சென்று பதவி ஏற்றவுடன், உடனடியாக பதவியை விட்டு விலகினார். பதவிக்கு நேர்மையாக முழுமையாகக் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய கொள்கையாக இருந்தது.
ஆகத்து 1942 இல், காமராசர் பம்பாயில் நடந்த அகில இந்திய காங்கிரசு கூட்டத்தில் கலந்துகொண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கதிற்குப் பிரச்சாரப் பொருட்களுடன் திரும்பினார். பம்பாய் அமர்வில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களையும் கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
காமராசர் உள்ளூர் தலைவர்களுக்குக் கூட்டத்தில் கூறப்பட்ட செய்தியைச் சேர்ப்பதற்கு முன்பு கைது செய்யப்படுவதை விரும்பவில்லை. பல்வேறு வழிகளில் கைது செய்யப்படுவதைத் தவிர்த்த இவர். வேலை முடிந்ததும் காவல் துறையிடம் சரணடைந்தார்.
சிறையில் இருந்தபோது, மார்ச் 1943 இல் சத்தியமூர்த்தி காலமானார். சூன் 1945 இல் விடுவிக்கப்படுவதற்கு முன்பு இவர் மூன்று ஆண்டுகள் சிறைக் காவலில் இருந்தார். இதுவே காமராசரின் கடைசி மற்றும் நீண்ட சிறைத் தண்டனையாகும். காமராசரின் விடுதலை ஆதரவான நடவடிக்கைகளுக்காக ஆங்கிலேயர்களால் ஆறு முறை ஏறத்தாழ 3,000 நாட்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
காமராசர் தனது முதல்வர் பதவியை துறந்த செய்த பிறகு, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் தங்கள் பதவிகளை ராசினாமா செய்துவிட்டு, காங்கிரசு கட்சியின் மறுமலர்ச்சிக்கு தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்று முன்மொழிந்தார். அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் மூத்த காங்கிரசு தலைவர்கள் அமைச்சுப் பதவிகளை விட்டுவிட்டு காட்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தார். இந்த ஆலோசனையானது “காமராசர் திட்டம்” என்று அறியப்பட்டது.
இந்திரா காந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராசரும் ஒருவர். இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்ட பல தலைவர்கள் இக்காலகட்டத்தில் அரசால் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்தியாவின் அரசியல் போக்குகுறித்து மிகுந்த குறையும் கவலையும் கொண்டிருந்தார்.
1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி, மதிய உணவுக்குப் பிறகு காமராசருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. 72 வயதில் மாரடைப்பு காரணமாக தூக்கத்தில் உயிர் பிரிந்தது. காமராசரின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக இராசாசி மண்டபத்தில் வைக்கப்பட்டது.
மறுநாள், காந்தி மண்டபதிற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. காமராசருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் சென்னை, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.
மக்களுக்காக பாடுபட்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல மண்ணை விட்டு சென்ற பின்னும்.., நம் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சிறந்த தலைவரை பற்றிய கட்டுரை எழுதியதில் பெருமைக்கொள்கிறது.
– லோகேஸ்வரி.வெ