தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படுமா..? அமைச்சர் முத்துசாமி பதில்..!
சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டப்பேரவைக் கூட்ட தொடர் கடந்த 20 ம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது. அதில் பல்வேறு தீர்மானங்கள், மற்றும் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
அதன்படி மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.
தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937 ஐ திருத்தம் செய்யும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதற்காகக் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையுடன் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும் வகையில் சட்டம் கடுமையாக்க மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
அப்போது சட்டப்பேரவையில் பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் முத்துசாமி, “தமிழகத்தில் பூரண மதுவிலக்கை உடனே கொண்டு வர முடியுமா என்பதனை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
பூரண மதுவிலக்கு கொண்டுவருவதில் அரசுக்கும் விருப்பம் உள்ளது. ஆனால், தற்போது அதற்கான சூழல் இல்லை. படிப்படியாக மதுக்கடைகளைக் குறைக்க வேண்டும் என்பது அரசின் எண்ணம்.
ஒரு கடையை மூடினால் மற்றொரு கடையில் வாங்கி குடிக்கிறார்கள். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தினால், அண்டை மாநிலங்களிலிருந்து மது உள்ளே வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
– லோகேஸ்வரி. வெ