பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வால் மனைவி சமீபத்தில் முஸ்லிம் மக்கள் மீது வெறுப்பை விதைக்கக் கூடாது என்று கூறியதையடுத்து, அவரை டார்கெட் செய்து சிலர் வெறுப்பை விதைக்கும் வகையில் பேசி வருகின்றனர்.
கடற்படை வீரரான வினய் நர்வாலுக்கும் அவரது மனைவி ஹிமான்ஷி நர்வாலுக்கும் கடந்த ஏப்ரல் 16ம் தேதி தான் திருமணம் நடந்திருந்தது. தேனிலவுக்காகவே அவர்கள் காஷ்மீர் சென்றிருந்தனர். அவர்கள் ஏப்ரல் 22ம் தேதி பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த போது, ஹிமான்ஷி கண் எதிரிலேயே அவரது கணவர் வினய்யை தீவிரவாதிகள் சுட்டு கொன்றனர். இதைப் பார்த்து ஹிமான்ஷி அதிர்ச்சியின் உச்சத்திற்கே போய்விட்டார். அங்கு அவருக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை. நொடிகளில் தனது கணவரை இழந்திருந்தார். கணவரின் சடலத்தில் அருகே வேதனையின் உச்சத்துடன் ஹிமான்ஷி அமர்ந்திருந்த வீடியோ இணையத்தில் பரவி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்த வினய் நர்வாலின் 27வது பிறந்தநாளை முன்னிட்டு, மே 1ம் தேதி ஹரியானாவின் ரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பங்கேற்ற வினய் நார்வலின் மனைவி ஹிமான்ஷி தனது கணவரின் நினைவில் கதறி அழுதார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய போது தான் ஹிமான்ஷி தனது கணவர் மரணத்திற்கு நியாயம் வேண்டும் என்றாலும் முஸ்லிம், காஷ்மீர் மக்கள் மீது வெறுப்பைப் பரப்பக்கூடாது. நாட்டுக்கு அமைதிதான் வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, வட நாட்டை சேர்ந்த பலர் ஹிமான்சியை கடுமையாக இணையத்தில் விமர்சித்து வந்தனர். சிலர் அவரை திட்டவும் செய்துள்ளனர். ஒரு சிலர், தனது கணவரின் பென்ஷன் பயத்தை ஹிமான்சி வாங்கக் கூடாது என்றும் கூறியிருந்தனர். இந்த நிலையில், ஹிமான்சி மீது தவறான கருத்தை பரப்புபவர்கள் மீதுமு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மகளிர் ஆணையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், லெப்டினன்ட் வினய் நர்வாலை மதம் பற்றி கேட்டு சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. லெப்டினன்ட் வினய் நர்வாலின் மரணத்திற்குப் பிறகு, அவரது மனைவி ஹிமான்ஷி தெரிவித்த கருத்துக்காக அவரை சமூக வலைதளங்களில் அவரதது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவளை ட்ரோல் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. எந்தவொரு கருத்து வேறுபாடும் கண்ணியமாக வெளிப்படுத்த வேண்டும். தேசிய மகளிர் ஆணையம் ஒவ்வொரு பெண்ணின் மரியாதையையும் கண்ணியத்தையும் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளது.