ADVERTISEMENT
கொடநாடு கொலை,கொள்ளை வழக்கு விசாரணை ஜனவரி 5 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு…
கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கின் விசாரணை ஜனவரி 5 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு உதகை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 159 பேரிடம் வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தனர்.
மேலும், குஜராத் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட செல்போன் தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் அந்தத் தகவல்கள் கிடைத்தால் விசாரணையில் பெரியளவில் உதவியாக இருக்கும் என்றும் சிபிசிஐடி தரப்பில் கூறப்பட்டது.
செல்போன் தகவல்கள் கிடைக்காத நிலையில், விசாரணைக்குக் கூடுதல் அவகாசம் கேட்டு சிபிசிஐடி கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்ற நீதிபதி வழக்கு விசாரணையை ஜனவரி 5-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
மேலும், வழக்கு விசாரணைக்காக சயான், வாளையார் மனோஜ், ஜித்தின் ஜாய் உள்ளிட்டோர் ஆஜரான நிலையில் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே, வழக்கில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகனுக்கு சிபிசிஐடி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கனகராஜ் விபத்தில் சிக்கியபோது முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகன் சிவகுமார் அவசர உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் , 28 ஆம் தேதி கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சிவ குமாருக்கு சிபிசிஐடி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.