கோவில்பட்டி சாதிய வன்மத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுக என விசிக எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்தி விசிக எம்.பி வெளியிட்ட அறிக்கையில்,
பட்டியல் சாதி அல்லது பட்டியல் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை பொது மக்களின் பார்வைக்குரிய எந்த இடத்திலும் அவமானப்படுத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பது அல்லது மிரட்டுவது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3 இன் கீழ் குற்றமாகும். அதைச் செய்தவருக்கு 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கலாம்.
பட்டியல் சாதியைச் சேர்ந்த பெண் சமைத்த உணவைத் தங்கள் குழந்தைகளுக்கு வழங்கக்கூடாது என்று பொது இடத்தில் கூறியவர்கள் மேற்குறிப்பிட்ட சட்டப் பிரிவின்கீழ் குற்றம் இழைத்துள்ளனர். அந்தக் குற்றத்துக்கு அங்கிருந்த அதிகாரிகளே சாட்சி.
குற்றம் செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதும், அங்கே அந்தக் குற்றவாளிகள் தமது பேச்சின்மூலம் மீண்டும் பட்டியல் சமூக மக்களை அவமதிப்பதும் சட்டத்தையும் நீதியமைப்பையும் பொருளற்றதாக்குகிறது.
தமிழ்நாடு அரசு இந்த அணுகுமுறையைக் கைவிட்டு, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.