ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அரசியலமைப்பு சட்டத்தின் மதிப்பீடுகளை குறைத்து மாநில உரிமைகளை பறித்து அதிபர் ஆட்சி முறைக்கு வழிவகுக்கும் என்றும் பாஜகவின் இந்த எதேச்சதிகாரப் போக்கிற்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் உரிய தீர்ப்பை வழங்குவார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்
சென்னை லயோலா கல்லூரியில் சமூகவியல் துறை சார்பில் சாதி எதிர்ப்பில் தலித் அரசியல் எனும் தலைப்பில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்துரையாற்றினார். அப்போது மாணவர்களிடையே பேசிய அவர்,
இன்றைய சூழலில் தலித் எனும் சொல்லை பயன்படுத்துவதையே இழிவாக கருதும் நிலை இந்திய அளவில் உள்ளது என்றும் தலித் என்பது ஒரு சாதியின் பெயர் அல்ல அது ஒடுக்கப்பட்ட மக்களை குறிக்கும் சொல் எனவும் இனம்,மொழி, பொருளாதார ரீதியில் ஒடுக்கப்பட்ட அனைவரையும் குறிக்கும் சொல் தலித். ஆனால் ஒரு குறிப்பிட்ட சாதியை மட்டும் குறிக்கும் சொல்லாக தலித் எனும் சொல் இந்தியாவில் பார்க்கப்படுவதாகவும் தலித் அரசியல் என்பது சாதி அரசியல் அல்ல, அது சாதி எதிர்ப்பு அரசியல் என்றும் அவர் தெரிவித்தார்
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய விசிக தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல் திருமாவளவன், ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற அடிப்படையில் சட்ட மசோதாவை பாஜக அரசு கொண்டு வருவது மிகவும் ஆபத்தான ஒரு முயற்சி, இது இந்திய அரசியலமைப்பு மதிப்பீடுகளை குறைத்து மாநிலங்களின் உரிமையை பறித்து அதிபர் ஆட்சி முறைக்கு வழிவகுக்கும் என்றும் பாஜகவின் இந்த எதேச்சதிகாரப் போக்கிற்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் உரிய தீர்ப்பை வழங்குவார்கள் என்று தெரிவித்தார்