திருப்பதி சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ரத்து…!! அமைச்சர் ராஜேந்திரன் முன் வைத்த கோரிக்கை..!!
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) 1974 ஆம் ஆண்டு முதல் சென்னையிலிருந்து ஒருநாள் திருப்பதி சுற்றுலா பயணத்தை (திறந்த முறை டிக்கெட் / இலவச தரிசனம்) இயக்கி வருகிறது.
1997 ஆம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் அழைத்து வரப்படும் பக்தர்களுக்கு, விரைவான தரிசனத்திற்கு அனுமதி அளித்து, சீக்கிர தரிசன டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்தியது. தற்போது வரை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு தினசரி 400 சீக்கிர தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்ததன் அடிப்படையில், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை, ஓசூர், கடலூர் மற்றும் பழனி ஆகிய மாவட்டங்களிலிருந்து திருப்பதிக்கு பக்தர்கள் தரிசனத்திற்கான பயணம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானம், அனைத்து மாநிலங்களுக்கான சுற்றுலா மற்றும் பிற துறைகளுக்கான SED (சிறப்பு நுழைவு தரிசனம்) டிக்கெட்டுகள் வழங்குவதை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. சீக்கிர தரிசன (SED) டிக்கெட்டுகளை ரத்து செய்வது, தமிழகத்திலிருந்து திருமலை வழிபாட்டிற்க்கு வரும் பக்தர்களை மிகவும் பாதிக்கும் என்பதால், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிக்காட்டுதலின்படி இதுதொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. இரா. இராஜேந்திரன் அவர்கள், ஆந்திரபிரதேச மாநிலத்தின் அறநிலையங்கள் துறை அமைச்சர் அன்னம் ராமநாராயண ரெட்டி அவர்களை நெல்லுாரில் நேரில் சந்தித்து மீண்டும் திருப்பதி சீக்கிர தரிசன டிக்கெட்டுகளை பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு ஒதுக்கீடு செய்து வழங்குமாறு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இந்நிகழ்வின்போது ஆந்திர மாநில நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நாராயணரெட்டி அவர்களும், மாண்புமிகு சட்டம், ஒழுங்கு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் N.M. பரூக் அவர்களும் உடன் இருந்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..