இது முன் பின் நடந்திராத அபூர்வ நிகழ்ச்சி..!! மஹாபெரியவா கதை – 13
”மணியோட பத்னி எந்த ஆஸ்பத்ரில இருக்கான்னு விஜாரி.. நான் பல்லக்குலேயே உள்ள போயி அவளைப் பாக்கலாமா…ன்னு கேளு…” – பெரியவா.
“திருப்புகழ் மணி” என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட கிருஷ்ணஸ்வாமி ஐயர், பெரியவாளின் அத்யந்த பக்தர். மைலாப்பூரில் இருந்தார். பெரியவாளிடம் அபரிமிதமான பக்தி உள்ள குடும்பம். திருப்புகழ் பாடல்களை ப்ரபலமாக்கியவர்களில் கிருஷ்ணஸ்வாமி ஐயரை குறிப்பிட்டு சொல்லலாம். அவருடைய மனைவிக்கு காசநோய் (TB) கடுமையாகி விட்டது. ஆந்த்ராவில் மதனபள்ளி ஹாஸ்பிடலில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
பெரியவா கால்நடையாக காஸி யாத்ரை புறப்பட்டு, மதனபள்ளியில் தங்கி இருந்தார். அதைக் கேள்விப்பட்டவுடன், “இவ்வளவு சமீபமாக பெரியவா இங்க வந்திருக்கறச்சே கூட, என்னோட பாவம், பெரியவாளை தரிசனம் பண்ண முடியலியே! ” மனஸும், சரீரமும் உருகிப் போய் கண்ணீர் வடிக்க மட்டுந்தான் என்னால் முடிந்தது. ஆனால் அதற்கும் உடல்நிலை இடம் கொடுக்க வில்லை.
”என்னோட கடைசி மூச்சு, இந்த படுக்கையிலே தான் போக போது” என்று அரற்றினாள். ”காலன் வரதுக்குள்ள, என் ஶங்கரனை [கால காலனை] பாத்துட்டேன்னா… . எவ்வளவோ ஆறுதலா இருக்கும் எனக்கு …ஆனால் பாழும் உடம்பு, படுக்கையில் புரளக்கூட முடியாம இருக்கு. நான் குடுத்து வெச்சது அவ்வளவுதான்”
அந்தர்யாமி அறியாததா..?
மதனப்பள்ளிக்கு பெரியவாளை தர்ஶனம் பண்ண வந்த பக்தர்,ஒருவர் “பெரியவாகிட்ட ஒரு விண்ணப்பம். திருப்புகழ் மணி ஐயரோட மனைவி இங்க ஒரு ஆஸ்பத்ரில ரொம்ப ஸீரியஸ்ஸா இருக்காங்க …..TB… ரொம்ப அட்வான்ஸ் ஸ்டேஜ் சொல்லிருக்காங்க….”
அவர் சொல்லி முடிக்கவில்லை, பாரிஷதரைக் கூப்பிட்டு, ”மணியோட பத்னி எந்த ஆஸ்பத்ரில இருக்கான்னு விஜாரி.. நான் பல்லக்குலேயே உள்ள போயி அவளைப் பாக்கலாமா…ன்னு கேளு…”
பொதுவாக நோயாளிகளை மருத்துவமனைக்கே சென்று பார்க்கும் ஸம்ப்ரதாயம் மடத்தில் இல்லை. ஆனால் இது special கேஸ்! திருப்புகழை தமிழ்நாட்டில் பரப்பிய முருக பக்தரின் ஸம்ஸாரம்… ஶுத்தாத்மா..
ஹாஸ்பிடல் அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று அந்த அம்மா படுத்திருந்த கட்டில் வரை, பல்லக்கிலேயே சென்று தர்ஶனம் கொடுத்தார் பெரியவா..!!
இது முன் பின் நடந்திராத அபூர்வ நிகழ்ச்சி…!
யாருக்குமே கிடைக்காத மஹாப் பெரிய பாக்யம்! பெரியவா தர்ஶனம் கிடைத்ததில் அம்மாவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
“நான் கனவுல கூட இதை நெனச்சு பாக்கல.. பெரியவாளே வந்தாளே! இந்த ஜன்மத்தை கரையேத்தி விட்டுட்டாளே! இனிமே எனக்கு எந்த பயமோ, கவலையோ இல்ல… சங்கரா…சங்கரா” என்று ஈனஸ்வரத்தில் சொல்லி சொல்லி கண்ணீர் வடித்தாள் அவள்.
பெரியவா தரிசனத்துக்கு முன் வரை மனம் சோர்ந்திருந்தவள், பின்னர் எப்போதும் போல மனதெம்போடு இருந்தாள்.. சில நாட்களிலேயே ஶிவ கணங்கள் வந்து அவளை ஶிவபதத்தில் சேர்க்க அழைத்துச் சென்றனர்.
-வீர பெருமாள் வீர விநாயகம்.