நூதனமாக பேசி பல பைக்குகளை திருடிய இளைஞர்.. இறுதியில் நண்பன் வைத்த ஆப்பு..!
கன்னியாகுமரி மாவட்டம் மாங்கோ பகுதியில் வசித்து வரும் தேவராஜ் என்பவரின் மகன் அபிஷேக் (23).
இவர் அந்த பகுதியில் உள்ளவர்களிடம் இருசக்கர வாகனத்தை தற்காலிகமாக பெற்றுக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் ஒரு சிலரிடம் வாங்கிய இருசக்கர வாகனத்தை அவர்கள் திரும்பக் கேட்டபோது கொடுக்காமல் அதை யாரோ திருடிச்சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்தநிலையில் மாங்கோடு பகுதியைச் சேர்ந்த அவரது நண்பரான ஏசுதாஸ் என்பவரிடம் அபிஷேக் இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். வாங்கி நீண்ட நாட்கள் ஆனதால் ஏசுதாஸ் அவரிடம் தன்னுடைய இருசக்கர வாகனத்தை பலமுறை திரும்ப கொடுக்குமாறு கேட்டுள்ளார். அபிஷேக் அதனை கொடுக்காமல் காலம் கடத்தியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஏசுதாஸ் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.
புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அபிஷேக்கை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இருசக்கர வாகனத்தை மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு கடையில் விற்றது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து போலீசார் அபிஷேக்கை கைது செய்துள்ள நிலையில் மார்த்தாண்டத்தில் உள்ள ஏசுதாஸின் இருசக்கர வாகனத்தை மீட்டனர்.
-பவானி கார்த்திக்