ADVERTISEMENT
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்…
நிதித்துறையிடம் ஆலோசித்தபின், போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தபோவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு பஞ்சப்படி வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்தன.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தும் சமரசம் ஏற்படாததால், போக்குவரத்துத் தொழிற்சங்க நிர்வாகிகள் ஜனவரி 9ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தை அறிவித்தனர்.
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் என்று போக்குவரத்துத்துறை உத்தரவிட்டது.
ஆனால், திட்டமிட்டபடி 9 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், செயலாளருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு தமிழக அரசு மீண்டும் அழைப்பு விடுத்தது.
இந்நிலையில், சென்னை பல்லவன் சாலையில் உள்ள பல்லவன் இல்லத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ள போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகள் தொடர்பாக நிதித்துறையிடம் கலந்தாலோசித்தபின் நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தபோவதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய போக்குவரத்து தொழிற்சங்கத்தினர், வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவித்துள்ளது.
தொழிற்சங்கங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்ட அறிவிப்பை திரும்ப பெற போவதில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)