பூந்தமல்லி அருகே தனது குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்த முதலாளிக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக வடமாநில தொழிலாளர்கள் சீர் வரிசையோடு கலந்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பீகார் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக வைரலான சில போலி வீடியோக்கள் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இதனால் அச்சமடைந்த வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு கூட்டம், கூட்டமாக படையெடுத்தனர். இதனையடுத்து களமிறங்கிய இரு மாநில அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையின் மேற்கொள்ள நடவடிக்கையால் இணையத்தில் பரவிவருவது போலியான வீடியோ என்பது கண்டறியப்பட்டது. அத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுபோல் பொய்யான வதந்தி பரப்புவோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை பாயும் என கடும் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து இரு மாநிலத்தில் நிலவிய பதற்றமான சூழ்நிலை முடிவுக்கு வந்தது.
தற்போது தனது ஓனர் வீட்டு விசேஷத்தில் பங்கேற்க சென்ற வடமாநில தொழிலாளர்கள் சீரோடு சென்று விழாவை சிறப்பித்துள்ள சம்பவம் இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. பூவிருந்தவல்லி அருகே நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தன்னிடம் பணிபுரியும் வடமாநிலத்தொழிலாளர்களை உறவினராக பாவித்து அவர்களுடைய முதலாளி அழைப்பு விடுத்துள்ளார்.
எனவே அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வட மாநில தொழிலாளர்கள் முதலாளியை மூத்த சகோதரன் போல் பாவித்து சீர்வரிசை தட்டுடன் சென்று கெளரவித்துள்ளனர். பூவிருந்தவல்லியை அடுத்த செம்பரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜாமணி – பத்மவாதி தம்பதியின் மகளது பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றுள்ளது.
கட்டுமான நிறுவன உரிமையாளரான ராஜாமணி தன்னிடம் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களை உறவினர்களாக பாவித்து விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். அழைப்பை ஏற்றுக்கொண்ட 50க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் சீர் வரிசை தட்டுடன் சென்று விழாவை சிறப்பித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரபரப்பப்பட்டு வரும் இந்த சமயத்தில் சகோதரத்துவத்தை பிரதிபலிக்கும் விதமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சி இணையத்தில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.