மறைந்த நடிகர் “முந்தானை முடிச்சு தவக்களை”-யின் மறுப்பக்கம்..!!
சுமார் 500 படங்களில் நடித்த “முந்தானை முடிச்சு” தவக்களை.. ஒரே ஒரு படத்தை தயாரித்ததால் எல்லாம் போச்சு..
பாக்யராஜ் தயாரித்து, நடித்த “முந்தானை முடிச்சு” என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தவக்களை சிட்டிபாபு. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் சுமார் 500 படங்கள் வரை நடித்துள்ளார்.
ஆனால் அவர் தான் சம்பாதித்த மொத்த பணத்தையும் ஒரே ஒரு படத்தை தயாரித்து அதன் மூலம் இழந்து, வறுமையில் சிக்கினார்.
“பயணங்கள் முடிவதில்லை” என்ற திரைப்படத்தில் ‘ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா’ என்ற பாடலில் ஒரு சில காட்சிகளில் மட்டும் தவக்களை நடித்திருப்பார். அதனை அடுத்து காமெடி நடிகர் குண்டுமணி, தவக்களையை அழைத்துச் சென்று பாக்யராஜிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது பாக்கியராஜ் அவரை ஒரு சில காட்சிகள் நடித்துக் காட்டுமாறு கூறினார். அவரது நடிப்பு பாக்யராஜுக்கு பிடித்து விட்டதை அடுத்து, கண்டிப்பாக உன்னை நான் அடுத்த படத்திற்கு கூப்பிடுகிறேன் என்று கூறியிருந்தார்.
அதன்படி “முந்தானை முடிச்சு” படத்தில் நான்கைந்து சிறுவர்கள் நடிக்கும் கேரக்டர்கள் இருந்த நிலையில் அதில் ஒருவராக தவக்களையை பாக்யராஜ் தேர்வு செய்தார்.
அந்த படத்தில் தவக்களையின் நடிப்பு மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றது. குறிப்பாக, “நான் அறிஞ்ச மாப்பிள்ளை தான்” என்ற பாடலில் அவருடைய நடிப்பு சூப்பராக இருக்கும்.
முந்தானை முடிச்சு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தவக்களைக்கு வாய்ப்புகள் குவிந்து வந்தன. “ஓசை”, “நீங்கள் கேட்டவை”, “காக்கி சட்டை”, “ஆண் பாவம்”, “என் ரத்தத்தின் ரத்தமே”, “பாட்டு வாத்தியார்” உள்பட பல படங்களில் நடித்தார்.
தமிழ் மட்டுமின்றி அவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்தார். குறிப்பாக தெலுங்கில் மோகன்பாபு ஹீரோவாக நடித்த படத்தில் வில்லனாகவும் தவக்களை நடித்திருக்கிறார்.
அதேபோல் இயக்குனர் வினயன் இயக்கிய “அற்புத தீவு” என்ற படத்தில் முழுக்க முழுக்க உயரம் குறைவானவர்கள் நடித்திருப்பார்கள். அதில் ஒரு முக்கிய கேரக்டரில் தவக்களை நடித்திருந்தார்.
ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. இதனையடுத்து சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்தார். சில நண்பர்களுடன் சேர்ந்து “மண்ணில் இந்த காதல்” என்ற படத்தை தயாரித்தார்.
அந்த படம் தயாரிப்பில் இருந்தபோதே நண்பர்கள் கழண்டு கொண்டனர். இதனால் முழு சுமையும் தவக்களை மேல் விழுந்தது. ஒரு வழியாக அந்த படத்தை கடன் வாங்கி தயாரித்து ரிலீஸ் செய்தபோது, அந்த படம் மிகப்பெரிய தோல்வி அடைந்ததால் கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக சேர்த்து வைத்த பணம் முழுவதையும் அவர் இழந்தார்.
அது மட்டுமின்றி வடபழனியில் ஆசை ஆசையாய் வாங்கிய வீட்டையும் விற்றுவிட்டு அதன் பிறகு வாடகை வீட்டில் தங்கினார்.
அதன் பிறகு சினிமினி என்ற கலைக்குழுவை நடத்தி ஓரளவுக்கு வருமானம் பார்த்தார். இருப்பினும் அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தார்.
ஆனால் யாரும் அவருக்கு கடைசிவரை வாய்ப்பு கொடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு அவர் காலமானார். ரசிகர்களை தனது நகைச்சுவையால் சிரிக்க வைத்த தவக்களையின் இறுதி காலம் மிகவும் சோகமாக இருந்தது.