நீதிமன்றத்தில் ஆஜாராகி கையெழுத்திட்டு வீடு திரும்பிய இளைஞரை ஓட ஓட வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பாடி பகுதியை சேர்ந்த சரண் என்கிற பச்சைக்கிளி (23) என்பவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் வழக்கு ஒன்றில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட பிறகு நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது 5-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் அவரை பின்தொடர்ந்து வந்துள்ளனர். அவர்களை கண்ட சரண் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் பைக்கை அங்கேயே விட்டுவிட்டு, முட்புதருக்குள் ஓடினர்.
அவரது நண்பர் தப்பிச் செல்ல சரணை அந்த கும்பல் விடாமல் துரத்தியது. இதையடுத்து ஓட ஓட அவரை விரட்டிச் சென்று தலை, முகம், மார்பு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டிவிட்டு அவர்கள் தப்பிச் சென்றனர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து திருமுல்லைவாயில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிப்பதால், அவர் சார்ந்த வழக்குகள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பரபரப்பான சாலையில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post