பணத்திற்காக நண்பன் செய்த கொடுரம்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ருத்திரகோட்டி-மோகன பிரியா. நெசவு தொழில் செய்து வரும் இவர்கள் பட்டு ஜரிகை அடகு கடையும் நடத்தி வருகின்றனர்.
இவர்களது மகன் தனுஷ் (21). பிஎஸ்சி கணிதம் பட்டதாரியான இவர் அரசு பணிக்காக டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகி வந்தார்.
இந்தநிலையில் வீட்டில் இருந்த தனுஷை அவருடைய நண்பர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு அழைத்ததால் வெளியே சென்ற தனுஷ் இரவாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் பதற்றம் அடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தனுஷைத் தேடி வந்த நிலையில், தனுஷின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இது குறித்து தனுசின் நண்பர்களிடம் கேட்ட போது அவர்களும் தனுஷைத் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை வாலாஜாபாத் அடுத்த வில்லிவலம் பஞ்சாயத்துக்குட்பட்ட கோயம்பாக்கம் பகுதியில் உள்ள பாலாற்றில் துண்டிக்கப்பட்ட இளைஞரின் வலது கால் ஒன்று தனியாக கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த காலை மீட்டு விசாரணை நடத்தினர். மேலும் பாலாற்று பகுதி முழுவதும் கால் துண்டிக்கப்பட்டவரின் உடல் புதைக்கப்பட்டு உள்ளதா? என்று தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அப்போது ஒரு இடத்தில் தோண்டிய போது அழுகிய நிலையில் இளைஞரின் உடல் புதைக்கப்பட்டு இருந்தது. பின்னர் சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதே சமயத்தில் தனுஷின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனால் அந்த சடலம் தனுஷாக இருக்கலாம் என் சந்தேகமடைந்த போலீசார் கோயம்பாக்கம் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது தனுஷ் மாயமான அன்று கார் ஒன்று அந்த வழியே கடந்து செல்வது பதிவாகி இருந்தது. அந்த காரின் நம்பரை வைத்து விசாரித்த போது அது அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்த தனுஷின் நண்பரான விஷ்வாவின் கார் என்பது தெரிந்தது.
பின்னர் விஷ்வாவை பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அந்த தகவலில் அவருடைய நண்பரான சுந்தர் என்பவருடன் சேர்ந்து தனுஷைக் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலைச் செய்து விட்டு உடலை பாலாற்றில் புதைத்ததாக தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து விஷ்வா, சுந்தர் ஆகிய 2
பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை செய்தனர். அப்போது விஷ்வா புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கவும், தனது வீட்டை பழுது பார்க்கவும் சிறுக, சிறுக தனுஷின் பெற்றோரிடம் இருந்து ரூ.10 லட்சம் வரை பணம் வாங்கி உள்ளார்.
மேலும் விஷ்வா பணத்தையும் திருப்பி கொடுக்க பணத்திற்கான வட்டியையும் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் தனுஷ் பணத்தை திருப்பி தருமாறு அடிக்கடி நெருக்கடி கொடுத்து வந்ததால்
ஆத்திரத்தில் விஷ்வா நண்பரான தனுஷைக் கொலை செய்ய திட்டமிட்டு உள்ளார்.
கடந்த சனிக்கிழமை வீட்டில் இருந்த தனுஷை காரில் தனியே அழைத்து சென்று தனது நண்பருடன் சேர்ந்து கயிற்றால் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்து உடலை பாலாற்றில் மணலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் போட்டு மூடிச் சென்றது தெரியவந்தது.
கொலைக்கு வேறு யாரேனும் உதவினார்களா? என்று 2 பேரிடம் வாலாஜாபாத் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்