அருந்ததியர் சமூகத்தினர் குறித்து இழிவாக பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் சீமான் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து கடந்த பிப்ரவரி மாதம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட சீமான் அருந்ததியர் சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
அவதூறு பேச்சு தொடர்பாக தலித் அமைப்பினர் ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் அருந்ததி சமூகத்தைப் பற்றி அவதூறாக பேசியதாக புகார் கொடுத்தனர். இதனால் சீமான் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், அவதூறு வழக்கு விசாரணைக்காக ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று காலை ஆஜரானார்.