ப்ரீபெய்டு மின் மீட்டர் திட்டம்..!! 300க்கும் மேற்பட்டோர் கைது.!! பரபரப்பான புதுச்சேரி..!!
புதுச்சேரியில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சியினரால் நடத்தப்பட்டு வரும் முழு அடைப்பு போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வை கண்டித்தும்., உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், ப்ரீபெய்டு மின் மீட்டர் திட்டம் மற்றும் மின்துறை தனியார் மயமாவதை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்கட்சி சார்பில் அறிவிப்புகள் வெளியானது..
அதன்படி, புதுச்சேரியில் காலை முதல் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. புதுச்சேரியின் முக்கிய பகுதிகளான நேரு வீதி, அண்ணா சாலை, காமராஜர் சாலை, மறைமலை அடிகள் சாலை, வழுதாவூர் சாலை, விழுப்புரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட நகரத்தின் முக்கிய வீதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு கடைகள் உட்பட வணிக நிறுவனங்களும் இந்த கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்..
அதேபோல், மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை புதுச்சேரி அரசு விடுமுறையும் அளித்துள்ளது.
புதுச்சேரி முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது மேலும்.. சந்தை வியாபரிகள் ஒரு நாள் வருமானம் கிடைக்கவில்லை என்றும் வருத்தம் தெரிவித்துள்ளனர்..
இதனிடையே, இந்தியா கூட்டணி நடத்தும் போராட்டத்தின் காரணமாக புதுச்சேரியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. பாலன், தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத், உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கடலூர் செல்லும் சாலை அருகேயுள்ள வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை சதுக்கம் முன் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.. இதில் திமுக மாநில அமைப்பாளர் சிவா, காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் உட்பட 300க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்..
அப்போது தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. அப்போது அவ்வழியே வந்த அரசு பேருந்தை வழிமறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் காவலர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அதிரடியாக கைது செய்தனர்..