சென்னை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் தரமணி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றினார். கடந்த 20ம் தேதி தரமணியில் இருந்து ஆலந்தூரை நோக்கி அவர் காரில் சென்றுகொண்டிருந்தார். மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மாலை 5 மணியளவில் கிண்டி மடுவின்கரை பாலத்தில் காரை தாறுமாறாக ஓட்டி சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஈக்காட்டுத்தங்கல் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மீது மோதியுள்ளார்.
இதனால் சாலையில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார். முருகேசனுக்கு காலில் எலும்பு முறிந்து போனது. இதனைக் கண்டு அங்கிருந்த மக்கள் முருகேசனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவத்தைக் கண்ட பொதுமக்கள், செந்தில் குமாரை விரட்டி சென்று கத்திப்பாரா மேம்பாலம் அருகே மடக்கிப் பிடித்து, கிண்டி போக்குவரத்து பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். செந்தில்குமார் மீது வழக்கும் பதியப்பட்டது.
இந்நிலையில் செந்தில்குமார் தரமணி ரயில்வே மைதானம் அருகே பெட்ரோல் ஊற்றித் தீவைத்து தற்கொலை செய்து கொண்டார். அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்து விட்டனர். விபத்து ஏற்படுத்தியதால் மன உளைச்சலில் இருந்த செந்தில்குமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார்கள்.