உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று ஒரு போதும் சொல்லமாட்டேன் என்று சொன்னவர் ஜெயலலிதா என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
திருநெல்வேலியில் இன்று (மே 30) செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் மோதலுக்குப் பின்னால் பாஜக இருப்பதாகக் கூறப்படுவது முற்றிலும் வேடிக்கையாக இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சிக்கும் பாமகவின் உட்கட்சிப் பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் கிடையாது, பின்னணியும் உட்கட்சிப் பிரச்சனைகளில் நாங்கள் தலையிடுவதும் இல்லை.
சேலம் மாநகராட்சியில் திமுகவைச் சேர்ந்தவர்கள் ஒரு கவுன்சிலரை கைநீட்டி அடிக்கிறார். ராணிப்பேட்டையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை வீடு புகுந்து கொலை செய்திருக்கிறார்கள். மற்றொரு மாணவிக்கு பலத்த படுகாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது முழுக்க முழுக்க சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் விட்டது. காவல்துறையினர் முறையான நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. கேட்டால் நாங்கள்தான் உண்மையான ஆட்சி செய்கிறோம் என முதலமைச்சர் மார்தட்டி பேசுகிறார். இது போன்ற சம்பவங்களைப் பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கிறது.
தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தது குறித்த கேள்விக்கு, “ஒரு மனிதனுக்கு தாய் மீது பற்று இருக்க வேண்டும். தாய்நாடு மீதும் பற்று இருக்க வேண்டும். தலைவராக இருக்கக்கூடிய அதுவும் குறிப்பாக நடிகர் கமல்ஹாசன், அவர் என்ன பேசுகிறார் என்று அவருக்கே தெரியவில்லை. இது போன்ற கருத்துக்களை அவர் தவிர்த்திருக்க வேண்டும். கன்னடத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரு முதலமைச்சரால் தனக்குப் பிரச்சனை வந்தது என்று கமல்ஹாசன் கூறியது தேவையில்லாத பேச்சு. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒருமுறை படப்பிடிப்பிற்காக பெங்களூரு சென்றிருந்தபோது, அங்கிருந்தவர்கள் ஜெயலலிதாவிடம் ‘கன்னடம் வாழ்க’ என்று கூறச் சொன்னார்கள். ஆனால், அந்த நேரத்தில் ஜெயலலிதா ‘உயிரே போனாலும் சொல்ல மாட்டேன்’ என்று கூறி விட்டடார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.