கர்நாடகத்தில் வெறுப்புணர்வு காரணமாக முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பில்பள்ளி என்ற பகுதியை சேர்ந்தவர் அஷ்ரப். இவர், கர்நாடக மாநிலம் மங்களுருவில் வேலை பார்த்து வந்தார். கடந்த 27ம் தேதி மங்களுருவில் இருந்து 10 கி.மீ தொலைவில் குடுப்பு என்ற இடத்திலுள்ள கிரிக்கெட் மைதானத்தின் அருகே அவர் சடலமாக கிடந்தார்.
இதையடுத்து, போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அப்போது, 20 முதல் 25 பேர் கொண்ட கும்பல் முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக அஷ்ரப்பை அடித்து கொல்லப்பட்டது தெரிய வந்தது. அவரை கட்டையால் அடித்து கொன்றுள்ளனர். இது தொடர்பாக 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பாரதிய நியாய ஷன்கிதா சட்டத்தில் (130 ) 2 பிரிவின் கீழ் இனம், மதம், மொழியை காரணமாகக் கொண்டு செய்யப்படும் கொலை என்றும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த பிரிவின் கீழ் மங்களுருவில் வழக்குப் பதிவு செய்யப்படுவது இதுவே முதன்முறை ஆகும்.
இது தொடர்பாக தக்ஷன கன்னட மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் முனீர் கட்டப்பாலா கூறுகையில், அஷ்ரப் கிரிக்கெட் போட்டியை பார்க்க போன இடத்தில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இந்த மைதானம் இந்து மைதானம் அல்லது சாம்ராட் மைதானம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு, முஸ்லிம்கள் விளையாடவோ அல்லது போட்டியை பார்க்கவோ செல்லக் கூடாது என்று அறிவிக்கப்படாத சட்டமே வைத்திருக்கிறார்கள். இந்த கொலை சம்பவத்தில் பஜ்ரங்தள், பாரதிய ஜனதா கட்சியினருக்கு தொடர்பு உள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் கவுன்சிலர் ரவீந்த்ரா நாயக் அந்த இடத்தில் இருந்துள்ளார். தற்போது, இவரின் மனைவி சங்கீதா கவுன்சலராக உள்ளார் ‘ என்று கூறியுள்ளார்.
மேலும் , சிலர் அஷ்ரப் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டதால் அடித்து கொல்லப்பட்டதாக சிலர் சோசியல் மீடியாவில் வதந்தி கிளப்பி வருகின்றனர். இதை மங்களுரு போலீஸ கமிஷனர் அகர்வால் மறுத்துள்ளார். இது குறித்து அகர்வால் கூறுகையில், இந்த விஷயத்தில் முன்னாள் கவுன்சிலர் ரவீந்த்ரா நாயக் மீது தொடர்பு உள்ளது பற்றி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும், அஷ்ரப் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமும் எழுப்பவில்லை என்றும் மறுத்துள்ளார்.