2008 ம் ஆண்டு உடலுறுப்பு தானம் பெறும் நடைமுறை தொடங்கியது முதல் தற்போது வரை தமிழகத்தில் 1726 கொடையாளர்கள் மூலம் , 6327 உறுப்புகள் பெறப்பட்டுள்ளன என அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற உடல் உறுப்புதான நிகழ்வில் ஹிதேந்தரனின் பெற்றோர் மருத்துவர்கள் அசோகன் , புஷ்பாஞ்சலி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர். இந்நிகழ்வில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் ,
” உறுப்பு தானத்தில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. சோடோ எனும் தென்னிந்திய அளவிலான உறுப்பு தான அமைப்பிற்கு தமிழ்நாடு தலைமையாக உள்ளது , எனவே இன்றைய நிகழ்வில் கேரளா , ஆந்திரா , தெலுங்கானா , கர்நாடகம் , அந்தமான் , லட்சத்தீவை சேர்ந்த மருத்துவத்துறை
உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் ஹிதேந்திரன் மறைந்த செப்டம்பர் 23 ம் தேதியும் , இந்தியளவில் ஆகஸ்ட் 3 ம் தேதியும் தேசிய உடலுறுப்பு தான நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது. மனிதபிமானத்திற்காக எத்தனை நாள் வேண்டுமானாலும் நடத்தலாம்.
உடலுறுப்பு தானம் வேண்டி தமிழகத்தில் பலர் காத்திருக்கின்றனர் .
அதன்படி , 6179 பேர் சிறுநீரகம் வேண்டியும் , 449 பேர் கல்லீரல் வேண்டியும் , 72பேர் இதயம் வேண்டியும் , 60 பேர் நுரையீரல் வேண்டியும் 24 பேர் இதயம் , நுரையீரல் இரண்டும் வேண்டியும் , கணையம் வேண்டி 1 நபர் , கைகள் வேண்டி 26 பேர் காத்திருக்கின்றனர் . தமிழகத்தில் உறுப்பு தானத்திற்காக யாருமே காத்திருக்காத நிலையை உருவாக்க வேண்டும் , எனவே அனைவரும் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும்.
உறுப்பு தான தினமான இன்று , இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் அவர்களது உடல் அடக்கம் செய்யப்படும் என்று முதலமைச்சர் மனிதாபிமானத்துடன் அறிவித்துள்ளார்.
உறுப்பு தானம் பெறும் நடைமுறை 2008 ல் தொடங்கியது , தற்போது வரை 1726 உறுப்பு கொடையாளர்கள் மூலம் , 6327 உறுப்புகள் பெறப்பட்டது.
கடந்த இரண்டரை ஆண்டில் 313 கொடையாளர் மூலம் 1242 உறுப்புகள் தானமாக பெறப்பட்டு அதன் மூலம் 663 பேர் பயனடைந்துள்ளனர். குழந்தை ஆணா பெண்ணா என ஸ்கேன் செய்வது தண்டனைக்குரிய குற்றம். அதுபோன்ற தவறுகளை கண்டறிந்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
உறுப்பு தானத்தில் தமிழகத்தை சேர்ந்த பயனாளர்களுக்கே முன்னுரிமை தருகிறோம் , இத்திட்டத்தில் உயிர் காப்பதே முக்கியம் , மாநில எல்லை முக்கியம் இல்லை என்று கூறினார்.
முன்னதாக கலைவாணர் அரங்கில் நடைபெற்ற முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்ய திட்டம் ஆண்டுவிழா நிகழ்வில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் தொடங்கப்பட்ட முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் ஏழை எளியவர்களை சென்றடையும் வகையில் பயனாளிகளை காப்பீட்டு திட்டத்தில் இணைக்க அக்டோபர் மாதத்தில் ஒரே நாளில் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. மொத்தம் உள்ள தொகுதிகளில் கடைநிலையில் உள்ள 100 தொகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அக்டோபர் மாதத்தில் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
Discussion about this post