சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே உள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு, உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ கூறியதாவது: அம்பேத்கரின் கொள்கைகளுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி திமிர்வாதம் பேசிக்கொண்டிருக்கிறார். அகம்பாவத்துடன் பேசி வருகிறார். இப்போது கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பித்துள்ளார். தமிழ் மொழியை இந்தியால் அழிக்க முடியாது என ஆளுநருக்கு திடீர் ஞானோதயம் வரவில்லை, தமிழ்நாடு அவரது பேச்சைக் கேட்டு கொந்தளிப்பதைக் கண்டு அஞ்சி நடுங்கியுள்ளார்.
ஆளுநர் உளறிக்கொட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார், நேற்று ஒன்று, இன்று ஒன்று என மாறி, மாறி பேசி வருகிறார். 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த வைகோ, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாஜக அல்லாத அரசை ஏற்படுத்த திமுக முயற்சித்து வருகிறது. இந்த முயற்சியில் திமுகவின் முடிவை மதிமுக பின்பற்றும் என உறுதியாக தெரிவித்தார்.
அண்ணாமலை சொத்து பட்டியல் விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தினமும் பரபரப்பாக தன்னைப் பற்றி பேச வேண்டும் என்பதற்காக அவர் எதையாவது செய்து கொண்டிருக்கிறார். முதலில் அவர் ஆதாரங்களை வெளியிடட்டும் அதற்கு திமுக தக்க பதிலடி கொடுக்கும் என விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த வைகோ, தமிழினை ஏமாற்றலாமா என திட்டம் போட்டு வருகிறார். மத்தியில் நரேந்திர மோடியும், தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவியும் தமிழர்களை ஏமாற்ற முயற்சித்து வருகின்றனர். நரேந்திர மோடி போல மோசடி வேஷம் போட உலகத்திலேயே ஆள் கிடையாது என அதிரடி பதிலளித்தார்.