மன்னார்காடு – அட்டப்பாடி மது கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 14 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரளா மாநிலம் பாலக்காடு அட்டப்பாடி பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த மது, பசிக்காக 2018ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி முக்கலி பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து உணவு திருடியதாக கூறி அவரை கையும், காலையும் கட்டி தரையில் இழுத்து சென்று அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தேசிய பழங்குடி ஆணையம், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கேரளா காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தது. மது மீது தாக்குதல் தொடங்கியது தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள், கார் ஓட்டுநர்கள் என மொத்தம் 16 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதில் சி.ஐ.டி.யூ நிர்வாகியும், டாக்ஸி டிரைவருமான சம்சுதீன் கம்பால் தாக்கியதில் மதுவின் விலா எலும்பு முறிந்ததாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. 15 இடங்களில் ஏற்பட்ட காயங்களால் மது உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டது. இந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை மன்னார்க்காடு எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ள சிறப்பு நீதிமன்றம் 14 பேரை குற்றவாளிகள் என அறிவித்துள்ளதோடு, தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
Discussion about this post