முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த 600 பக்க இறுதி அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆக.27 இன்று வழங்கினார்.
முன்னாள் முதல்வர் ஜெ.வின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பில் தெரிவித்த நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு செப்.25 ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
விசாரணைக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் இதுவரை 14 முறை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்றத்தின் வழக்கு விசாரணையால் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவக் குழு உதவியுடன் விசாரணையை மீண்டும் தொடர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
2022 மார்ச் 7-ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் விசாரணையை தொடங்கியது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் என மொத்தம் 159 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது.
தற்போது 5 ஆண்டுகள் கழித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் சந்தித்து 600 பக்க அறிக்கையை வழங்கியுள்ளனர்.