பல லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் கடத்தல்..!
திருப்பத்தூர் அருகே காரில் கடத்தி வரப்பட்ட பல லட்சம் மதிப்பில் 6 செம்மரக்கட்டைகள் காருடன் பறிமுதல்.. ஒருவரை கைது செய்து போலீசார் வனத்துறையிடம் ஒப்படைப்பு. பல மதிப்பிலான செம்மரம் கடத்திய முக்கிய நபருக்கு வலைவீச்சு.. வனத்துறையினருக்கு தெரியாமல் செம்மரம் கடத்தல் இத்தனை நாட்களாக அரங்கேறியது எப்படி?
திருப்பத்தூரில் உள்ள கருப்பனூர் பகுதியில் செம்மரக்கட்டைகள் கடத்தி செல்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரான ஸ்ரேயா குப்தா அவர்களுக்கு ரகசிய தகவல் வந்தது.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்கள் கருப்பனூர் பகுதியில் வசிக்கும் சரவணன் மகன் சாரதி (வயது 20) என்பவர் போர்ட் காரில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 6 செம்மரக்கட்டைகள் இருந்ததை கண்டுபிடித்தார்கள். அதனை தொடர்ந்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து சாரதி என்பவரை கைது செய்து திருப்பத்தூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
மேலும் விசாரணையில் கொடுமாப்பள்ளி பகுதியை சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ் (வயது 30) என்பவர் பி.கே.பி நகர் பகுதியில் உள்ள கிருஷ்ணவேணி என்பவருடைய வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு செம்மரம் வெட்டுவதற்காக ஆட்களை சேகரித்து அனுப்பி வைத்திருந்தது தெரிய வந்தது, இந்த நிலையில் அங்குச் சென்ற போலீசார் மற்றும் வனத்துறையினர் வீடு பூட்டி இருந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது. அதில் ஒரு தனி அறையில் செம்மரம் வெட்டுவதற்கான, ஆட்களை அனுப்பி வைப்பதற்கு 10 கோடாரி, டிராவல் பேக், டார்ச் லைட், மரம் அறுப்பதற்கான ரம்பம், மற்றும் லுங்கிகள் உடைகள் உள்ளிட்டவைகள் இருந்தன அதனை வனத்துறையினர் பறிமுதல் செய்து வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
மேலும் இது தொடர்பாக திருப்பத்தூர் மாவட்டம் மட்டுமில்லாமல் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலத்தில் உள்ள செம்மரக்கட்டைகள் வெட்ட ஆட்கள் சேகரித்து வந்த விக்கி என்ற விக்னேஷை போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் வலைவீசி தேடி வருகின்றனர்.
செம்மரக்கட்டைகளை வெட்டி திருப்பத்தூர் மைய பகுதியில் பதுக்கி வைத்து வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் இச்சம்பவத்தில் யார் பின்புலத்தில் இருக்கிறார்கள் எனவும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் மேலும் வனத்துறையினருக்கு தெரியாமல் செம்மரம் கடத்தல் இத்தனை நாட்களாக அரங்கேறியது எப்படி? சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
திருப்பத்தூரில் செம்மர கடத்தல் சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
