ஆந்திராவில் இருந்து வந்த கஞ்சா..!! அதிரடி ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்..!!
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே 6 கிலோ கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த இரண்டு இளைஞர்களை மதுவிலக்கு அமலாக்குத்துறை காவல் துறையினர் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா விற்பனை அதிகரித்து உள்ளது. பல இடங்களில் கஞ்சா போதைக்கு கல்லூரி மாணவர்கள் அடிமையாகி வருவது வாடிக்கையாக உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட காவல்துறையினர் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தி சோதனையில் ஈடுபட்டு கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று தருமபுரி மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து காவல் நிலைய ஆய்வாளர் கலையரசி தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் கோபி தலைமையிலான காவல் துறையினர் பாலக்கோடு பகுதியில் உள்ள தக்காளி மார்க்கெட்ட் பின்புறம் சென்று சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டு பிடித்து விசாரித்ததில் வெள்ளிச்சந்தை அருகே உள்ள கெட்டு கொட்டாய் பகுதியில் கஞ்சா இருக்கும் இடம் தெரிய வரவே காவல் துறையினர் விரைந்து சென்று அப்பகுதியில் சோதனை செய்ததில் வீட்டிற்கு பின்புறம் 6 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து காவல் துறையினர் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை மேற்கொண்டதில் வெள்ளி சந்தை அருகே கெட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்த மாதேஷ் என்பவரது மகன் தமிழரசன் (25) என்பதும் மற்றும் பாலகோடு நகரப் பகுதியைச் சேர்ந்த மாதேஸ் என்பவரின் மகன் மணிகண்டன் (25) என்பதும் தெரிய வந்தது.
இவர்கள் இருவரும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து மொத்த விலைக்கு கஞ்சா வாங்கி கடத்தி வரப்பட்டு மற்ற பகுதிகளுக்கு சில்லரையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மாவட்டத்தில் இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு பணிக்கு செல்லாமல் கஞ்சா கடத்தல் செய்து விற்பனை செய்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.