விவசாயிகள் மீது காரை ஏற்றி கொன்ற பாஜக மாஜி..! ஜாமீன் கொடுத்த உச்சநீதிமன்றம்..!
கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை மத்திய பாஜக அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடும் குளிர், வாட்டிய வெயில், பனி எதனையும் பொருட்படுத்தாமல் மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை ஓராண்டு காலம் முன் எடுத்தனர். இந்தப் போராட்டத்தில் 700 விவசாயிகள் மரணம் அடைந்தனர்.
உலகையே அதிரவைத்த இந்திய விவசாயிகளின் போராட்டத்துக்கு மத்திய பாஜக அரசு அப்போது பணிந்தது. சர்ச்சைக்குரிய 3 விவசாய சட்டங்களைக் கைவிடுவதாகவும் அறிவித்தது. அத்துடன் விவசாயிகளிடம் பிரதமர் மோடி மன்னிப்பும் கேட்டார்.
அதே சமயம் டெல்லி எல்லையில் நடைபெற்ற அந்த போராட்டத்தை போல உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் நகரிலும் மற்றொரு குழு விவசாயிகள் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் பேரணிக்குள் மத்திய இணமை அமைச்சராக இருந்த அஜய் மிஸ்ராவின் மகன் அதி வேகமாக காரை இயக்கியுள்ளார். அதில் 8 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பலியாகினர். 8 விவசாயிகள் காரை ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மத்திய இணை அமைச்சராக இருந்த பாஜகவின் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ராவால் படுகொலை செய்யப்பட்ட குடும்பங்களுக்கு காங்கிரஸின் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். இந்த விவகாரம் மிகப் பெரும் அரசியல் சர்ச்சையாகவும் வெடித்தது.
அதனையடுத்து ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தமக்கு ஜாமீன் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் ஆஷிஷ் மிஸ்ரா தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் கொலையாளி ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் டெல்லி அல்லது லக்னோவில் தங்கி இருக்க வேண்டும் என நிபந்தனை விதித்தது. மேலும் ஆஷிஷ் மிஸ்ரா மீதான வழக்கை விரைவாக விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
-லோகேஸ்வரி.வெ