வலுக்கட்டாயமாக போதை மாத்திரை விற்பனை..!! அடிமையான 2கே கிட்ஸ்..!! அதிரடி ஆக்ஷனில் போலிஸ்..!!
பரமத்தி வேலூரில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பலை காவலர்கள் அதிரடியாக கைது செய்துள்ளனர்..
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மற்றும் பொத்தனூர் பகுதியில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து சில நபர்கள் அதிக அளவு போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாகவும், இதனை அதிக அளவில் இளைஞர்கள் வாங்கி பயன்படுத்துவதாகவும் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பேரில் பரமத்தி வேலூரில் சில முக்கிய பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தெற்கு நல்லியம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் சங்கர் (வயது 24) என்பவர் பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்., அதில் குறிப்பிட்டிருப்பதாவது கடந்த சில மாதங்கள் வரை தான் போதைப் பழகத்திற்கு அடிமையாக இருந்ததாகவும்., பொத்தனூரைச் சேர்ந்த நித்திஷ் (வயது22) தெற்கு நல்லியாம் பாளையத்தைச் சேர்ந்த பசுபதி (வயது 24) கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த நாகராஜன் மகன் கௌதம் (வயது 21) பாலப்பட்டியைச் சேர்ந்த கிஷோர் (வயது 17) ஆகியோர் போதை மாத்திரைகளை வலுக்கட்டாயமாக விற்பனை செய்வதாகவும் அதனை ஊசி மூலம் நரம்புகளில் செலுத்தினால் அதிகப்படியான போதை வரும் எனக் கூறி ஒரு மாத்திரை 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்ததாகவும் குறிபிட்டுள்ளார்..
இந்த போதை மாத்திரைகளை பயன்படுத்தியதால் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் தற்போது மாத்திரை வாங்கி பயன்படுத்துவதை நிறுத்தி விட்டதாகவும் கூறியுள்ளார். ஆனால் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வரும் அந்த 4 பேரும் தன்னிடம் போதை மாத்திரை தொடர்ந்து வாங்க வற்புறுத்தி வருவதாகவும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் அவர்களைத் தேடி வந்த நிலையில் தெற்கு நல்லியம்பாளையம் ஊர்ப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ள இந்த வாலிபால் மைதானத்திற்கு பலதரப்பட்ட இளைஞர்கள் விளையாட வருவதுண்டு போதை மருந்து விற்கும் இந்த கும்பல் தினம்தோறும் வாலிபால் மைதானத்தில் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக காவலர்களுக்கு கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்ற காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நான்கு பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையைத் தொடர்ந்து நித்திஷ், பசுபதி, கௌதம் ஆகிய மூன்று பேரும் பரமத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை நாமக்கல் இளைஞர் சிறார் நீதி குழும நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி சேலம் கூர்நோக்கு மையத்தில் அடைத்தனர்.