திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் தேர்தலில் போட்டியிட அக்டோபர் 7-ஆம் தேதி வேட்பு மனு அளிக்கலாம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுகவின் 15-வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, மாவட்ட செயலாளர், அவைத்தலைவர், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
அதன்பின் திமுக சார்பில் 15வது பொதுத் தேர்தல் தொடர்பான பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டிருந்தார். அதை தொடர்ந்து திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், தணிக்கைக் குழு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட அக்டோபர் 7-ஆம் தேதி வேட்பு மனு அளிக்கலாம் என்றும் வேட்பு மனு கட்டணமாக ரூ.50,000 செலுத்த வேண்டும் எனவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 9ம் தேதி காலை 9 மணிக்கு பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார். தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், மற்றும் தணிக்கை குழு உறுப்பினர்கள் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கு ஐவர் முன்மொழிய, ஐவர் வழிமொழிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.