கோவை, பீளமேடு அருகேயுள்ள நவ இந்தியா பகுதியில் இந்துஸ்தான் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரி உள்ளது. இங்கு 300 க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு தங்கும் விடுதியும் செயல்படுகிறது. இந்த பராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் திருவண்ணாமலையை சேர்ந்த அனுப்பிரியா (வயது 18) என்ற மாணவி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த மாணவ – மாணவிகளுக்கு நேற்று பயிற்சி நடந்து கொண்டு இருந்தது. மதியம் அனைவரும் உணவு அருந்த சென்று விட்டனர். அப்போது, மாணவ – மாணவிகள் அவர்கள் உடமைகளை பயிற்சி நடந்த வகுப்பறையில் வைத்து விட்டு சென்றுள்ளனர்.
இதில் , நான்காம் ஆண்டு படிக்கும் மாணவி பையில் இருந்த பர்சில் இருந்து ரூ 1500 காணாமல் போயுள்ளது. உணவு அருந்தி விட்டு வந்த மாணவி பணம் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே, இதுகுறித்து பேராசிரியர்களிடம் கூறியுள்ளார். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பார்த்த போது , அனுபிரியா தனியாக அந்த அறையை விட்டு கடைசியாக வெளியே வந்தது தெரிய வந்தது. இதனால் அந்த மாணவிதான் பணத்தை எடுத்திருக்கலாம் என்று பேராசிரியர்கள் சந்தேகப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, பாராமெடிக்கல் கல்லூரி முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அனுப்பிரியாவை கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர் 5வது மாடியில் உள்ள அறையில் வைத்து விசாரித்துள்ளனர். அங்கு, சக மாணவர்களும் இருந்துள்ளனர். மாலை இரண்டு மணி முதல் 4:30 மணி வரை விசாரணை நடந்துள்ளது. ஆனால் , அந்த மாணவி பணத்தை எடுக்கவில்லை என்று கூறி மறுத்துள்ளார். மற்ற மாணவ – மாணவிகள் வகுப்புகள் முடிந்து விடுதிகளுக்கும், வீடுகளுக்கும் சென்ற நிலையில் அனுபிரியாவை அறையை விட்டு வெளியே விடவில்லை என கூறப்படுகிறது.
மாலை 6.30 மணி அளவில் அனுப்பிரியாவை அவரது வீட்டுக்கு செல்லும்படி கூறி அனுப்பியுள்ளனர். இதனால் அவமானத்துடன் வெளியேறிய அனுப்பிரியா நான்காவது தளத்திற்கு வந்தவுடன் திடீரென்று அங்கு இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாணவி மீது திருட்டு பட்டம் சுமத்தியதால் அவர் அவமானம் அடைந்து தற்கொலை செய்த தகவல் சக மாணவ – மாணவிகளுக்கு பரவியது. இதனால், மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். கல்வீச்சில் கல்லூரியின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது.
இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மாணவி அனுபிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அனுப்பிரியா தற்கொலை செய்த தகவல் திருவண்ணாமலையில் உள்ள மாணவியின் தாயாருக்கு தெரிவிக்கப்பட்டருது. தந்தை இல்லாத நிலையில் ஒரே மகளான அனுப்பிரியா இறந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் வானதி உறவினர்களுடன் கோவைக்கு விரைந்து வந்தார். மகளின் உடலை பார்த்து கதறி அழுதார். பின்னர், கோவை பீளமேடு போலீஸ் நிலையத்தில் கல்லூரி பேராசிரியர்கள் மீது வானதி புகார் செய்தார். மாணவியின் உடல் இன்று உடற்கூறு ஆய்வுக்கு பிறகு தாயிடத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது. மருத்துவமனையில் ஏராளமான மாணவர்கள் கூடியிருப்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.