மும்பையில் இன்று இந்திய கூட்டணியின் 2வது ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இதில் காங். தலைவர்கள் சோனியா, ராகுல், கார்கே பங்கேற்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றனர்.
பின்னர் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அனைவரின் முன்பும் பேசினார். அப்போது பேசியதாவது,
‘இந்தியா’ என்ற பெயரே பாஜகவுக்கு பயத்தையும் காய்ச்சலையும் உண்டாக்கி விட்டது. எதிர்க்கட்சி கூட்டணியை கொச்சைப்படுத்தி பேசுவதையே பாஜகவினர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். நமது நாட்டை பாஜக ஆட்சி பல்வேறு வகைகளில் சீரழித்துள்ளது.
சீரழிவை எப்படி சரி செய்யப் போகிறோம் என்பதை நாட்டு மக்களுக்கு நாம் சொல்ல வேண்டும். ஜனநாயகத்தை காப்பாற்றுவது என்ற ஒற்றை இலக்கின் முன் பாஜக தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
‘இந்தியா’ கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு ஒளிமயமான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள். எதேச்சதிகார ஆட்சி முடிந்து மக்களாட்சி மலரத் தேவையான கொள்கையால் நம்மை அடையாளப்படுத்த வேண்டும். பாஜகவுக்கு எதிரான கட்சிகளை முடிந்த வரை ‘இந்தியா’ கூட்டணியில் சேர்த்தாக வேண்டும்.
மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் அரசை ஒன்றியத்தில் அமைப்பதே நமது அணியின் நோக்கம். ஒருங்கிணைப்பு குழு, குறைந்தபட்ச செயல் திட்டத்தை உடனடியாக உருவாக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.