வெள்ளியங்கிரி மலையில் நிகழும் சோகம்..!
திருவள்ளூரைச் சேர்ந்தவர் வெள்ளையங்கிரி மலை ஏறும்போது மூச்சுதிணறல் ஏற்ப்பட்டு உயிரிழப்பு. இதுவரை வெள்ளையங்கிரி மலையில் உயிரிழப்பு 9 என அதிகரித்து உள்ளது.
கோவை மாவட்டம் பூண்டியில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் “தென் கயிலாயம்” என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் காணப்படுகிறது.
7-வது மலை உச்சியிலே சுயம்பு லிங்கமாக காட்சி அருளும் வெள்ளியங்கிரி ஆண்டவரை, ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் 7 மலை ஏறி தரிசனம் செய்து வருகிறார்கள்.
பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை என மூன்று மாதம் மட்டுமே பக்தர்களுக்கு வெள்ளியங்கிரி மலை ஏற அனுமதி வழங்கப்படுகிறது.
7 மலைகளை கொண்டுள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் குழு குழுவாகச் சென்று வெள்ளையங்கிரி ஆண்டவனைக் காண அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.முழு உடல் பரிசோதனை செய்துவிட்டு மலை ஏற வேண்டும். வனத்துறை சார்பில் 6வது மலையில் முகாம் அமைக்கப்பட்டு பக்தர்கள் பரிசோதிக்கப்பட்டு வருகிறார்கள். மலைகளில் பக்தர்கள் டிரோன் மூலமும் கண்காணிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 28) மதிய வேளையில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் கிராமத்தை சேர்ந்த புண்ணியகோடி (46) யுடன் அவருடைய நண்பர்கள் 10 பேரும் மலை அடிவாரத்தில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, முதல் மலை ஏறிக் கொண்டிருக்கும் போது புண்ணியக்கோடிக்கு திடீரென வாந்தி வந்து மூச்சு திணரல் ஏற்ப்பட்டது.
அவரது நண்பர்கள், உடனே புண்ணியகோடியை கீழ் அடிவாரத்திற்கு அழைத்து சென்று 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆலந்துறையில் உள்ள பூலுவபட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே புண்ணியகோடி உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து ஆலந்துறை போலீசாருக்கு செய்தி அனுப்பப்பட்டு உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதானைக்கு அனுப்பப்பட்டது.
ஆண்டுதோறும் வெள்ளியங்கிரி மலையில் ஏறும் பக்தர்கள் அதிகரித்து வரும் சூழலில் மூச்சு திணறல், இருதய பாதிப்பு, உடல் நலக்குறைவு போன்ற காரணங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இச்சூழலில் உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் கொண்டவர்கள், சர்க்கரை நோய் இருப்பவர்கள், ஆஸ்துமா, மூச்சுத்திணறல், நரம்பு தளர்ச்சி, வலிப்பு நோய் போன்ற உடல் நலக்குறைவு உள்ளவர்கள் மலை ஏறக்கூடாது என வனத்துறையினர் எச்சரித்து வருகிறார்கள்.