ப.சிதம்பரம் மீது நடவடிக்கை…!! மணிப்பூர் காங்கிரஸ் கோரிக்கை…!!
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்குமாறு மல்லிகார்ஜுன கார்கேவிடம் மணிப்பூர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
மணிப்பூரில் மைத்தேயி இனத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கி வருவதை மறு பரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தற்கு பழங்குடியினர் எதிர்ப்புத் தெரிவித்ததை தொடர்ந்து மாணவர்கள் சங்கம் அமைதிப் பேரணி நடத்தியுள்ளனர்.
அப்பேரணியில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல், மாநிலம் முழுவதும் வன்முறையாக உருவெடுத்துள்ளது. கடந்த ஓராண்டிற்கும் மேலாக இந்த வன்முறை நீட்டித்து வரும் நிலையில் மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் எக்ஸ் தளப்பதிவில் பிராந்திய சுயாட்சிக்கு ஆதரவான கருத்தை பதிவிட்டு உடனடியாக அதனை நீக்கியுள்ளார். இதுகுறித்து மல்லிகார்ஜுன கார்கேவிற்கு மணிப்பூர் காங்கிரஸ் தலைவர்கள் எழுதிய கடிதத்தில், மணிப்பூர் விவகாரம் தொடர்பான ப.சிதம்பரம் பதிவின் உள்ளடக்கத்தை நாங்கள் ஒருமனதாக கண்டிக்கிறோம் என்றும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.